பசியில் துடித்த விமானப் பயணிகள் – சொந்த செலவில் “பீட்ஸா” வழங்கிய விமானி
நியூயார்க்: அமெரிக்க விமானம் ஒன்று வானிலை காரணமாக வழியில் இறங்கி தாமதமாக புறப்பட்டதால் அதன் விமானி தன்னுடைய சொந்த செலவில் பயணிகள் அனைவருக்கும் உணவளித்து அசத்தியுள்ளார்.
அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை "பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்" என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது.
மோசமான வானிலை:
அன்று டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால் வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காலதாமதம்:
ஏற்கனவே போய் சேர வேண்டிய நேரத்தை விட தாமதமாகி விட்டதால் சிறிய விமான நிலையமான செயென்னேவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் முனங்க ஆரம்பித்தனர்.
வயிற்றைக் கிள்ளிய பசி:
விமானத்தில் இருந்த உணவும் தீர்ந்து போனதால் பசி வேறு ஒருபுறம் வயிற்றைக் கிள்ள பயணிகளின் பொறுமை எல்லை தாண்டி கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தது.
விமானியின் அறிவிப்பு:
இதை புரிந்துக் கொண்ட விமானி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். "அன்புக்குரிய பயணிகளே.. பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு "சீப்" ஆன கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், அந்நிறுவனத்தின் விமானியாக பணியாற்றும் நான் "சீப்" ஆனவன் அல்ல. பசியில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சொந்த செலவில் "பீட்ஸா" ஆர்டர் செய்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் அவற்றை சாப்பிட்டு மகிழலாம்" என்று திடீர் மகிழ்ச்சியை அளித்தார்.
விமானத்திற்கு "பீட்ஸா" டெலிவரி:
அதற்குள் அவர் ஆர்டர் அளித்த பீட்ஸாக்கள் செயென்னே விமான நிலையத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்து சேர விமான நிலையை அதிகாரிகளின் அனுமதியுடன் டாமினோஸ் நிறுவனத்தின் பீட்ஸா டெலிவரி வாகனம் நேராக அந்த விமானத்தின் அருகிலேயே சென்று விமான பணிப்பெண்களிடம் பீட்ஸாக்களை ஒப்படைத்தது.
சிங்கிள் ஆர்டர்:
தனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய தனி ஆர்டரை சந்தித்ததில்லை என்று பேட்டியளித்த செய்ன்னே நகரின் டாமினோஸ் பீட்ஸா கடையின் மேனேஜர், அந்த பில்லுக்கு உரிய தொகை முழுவதையும் அந்த விமானி தனது கிரெடிட் கார்டின் மூலம் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.