"சதம்" போட்டுக் கலக்கும் சீனாவின் 3 பாண்டா குட்டிகள்!
குவாங்சூவி: சீனாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பாண்டா குட்டிகள் 100 நாட்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரையும் அதிசயக்க செய்துள்ளது.
சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தனர்.
இவை குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் தாய்ப் பாண்டா ஜூஷியாவ்க்கு பிறந்திருந்தன.
அறிவிப்பு தாமதம்:
பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தது.
இன்குபேட்டர் பராமரிப்பு:
இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் எனப்படும் உயிர்காப்புக் கருவிகளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டன.
100 நாட்களாக ஆரோக்கியம்:
அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தப் பாண்டாக் குட்டிகள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறிவந்த நிலையில் 100 நாட்களையும் கடந்து இவை மூன்றும் ஆரோக்கியமாக உள்ளன.
பாண்டாக்கள் எண்ணிக்கை குறைவு:
சீனாவின் தென் மேற்கு காட்டுப் பகுதிகளில் சுமார் 1600 பாண்டாக்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றன. பாண்டாக்களின் இனவிருத்தி வீதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.