கண்ணைக் கவரும் "கலர்புல்" பூமி... புதுப் படம் வெளியிட்ட நாசா.. ஒபாமா பெருமிதம்!
வாஷிங்டன்: நாசாவின் டீப் ஸ்பேஸ் செயற்கைக்கோள், பூமியில் சூரிய ஒளி படும் பக்கத்தை துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் நாசாவின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் செயற்கைக்கோள் (Deep Space Climate Observatory satellite)' , பூமியில் சூரிய ஒளி படும் பக்கத்தை துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. இந்த அற்புதமான புகைப்படங்களை நேற்று நாசா வெளியிட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் நாசாவை பாராட்டியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா டீப் ஸ்பேஸ் என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது. இது தற்போது ஒரு மில்லியன் தொலைவில் இருந்து, பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
நியூ ஹாரிஸான்ஸ்...
கடந்த வாரம் புளூட்டோ கிரகத்தைக் கடந்து போய் நியூஹாரிஸான்ஸ் விண்கலம் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்தது. அவற்றை ஒவ்வொன்றாக பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு நியூஹாரிசான்ஸ் அனுப்பி வருகிறது. அந்த அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.
எபிக் கேமரா...
இந்நிலையில் தற்போது டீப் ஸ்பேஸ் செயற்கைக்கோள் எடுத்த பூமியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படமானது நாசாவின் எர்த் பாலிகுரோமேட்டிங் இமேஜிங் (EPIC) கேமராவால் எடுக்கப் பட்டதாகும்.
தனித்தனி போட்டோக்களை இணைத்து...
தற்போது அனுப்பப் பட்டுள்ள இந்தப் புகைப்படமானது மூன்று தனித்தனி புகைப்படங்களை இணைத்து உருவாக்கப் பட்டது.
வெவ்வேறு பில்டர்கள்...
இவ்வாறு தனிப்பட்ட புகைப்படங்களை இணைப்பதன் மூலம் அதன் தரத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். இந்த கேமராவால் தொடர்ந்து பத்து புகைப்படங்களை வெவ்வேறு பில்டர்களை உபயோகித்து எடுக்க இயலும்.
அமெரிக்கா தெரிகிறது...
தற்போது நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படமானது இம்மாதம் 6ம் தேதி எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் மேற்கு மற்றும் மத்திய அமெரிக்கா தென்படுகிறது. மேலும், டர்க்கைஸ் வண்ணத்தில் இருக்கும் இடங்கள் கரீபியன் தீவுகளை சுற்றியுள்ள ஆழமற்ற பகுதிகள் என்றும் கூறப்படுகிறது.
நீலநிற புகைப்படம்...
பூமியின் மீது காற்று மூலக்கூறுகளால் சூரிய ஒளி பரவியிருப்பதை மிக அழகாக காட்டுகிறது இந்தப் புகைப்படம். இதனால் தான் இந்தப் படம் நீலநிறத்தில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தினசரி மாற்றங்கள்...
மேலும், இந்த வளிமண்டல தாக்கத்தை புகைப்படங்களில் இருந்து நீக்க விஞ்ஞானிகள் குழு முயற்சித்து வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் பூமியில் நடைபெறும் தினசரி மாற்றங்களை இந்த செயற்கைக்கோள் துல்லியமாக படம் எடுத்து தரும். அதன் மூலம் ஆராய்ச்சி இன்னும் வலுப்பெறும்.
ஒபாமா வாழ்த்து:
நாசா வெளியிட்டுள்ள பூமியின் இந்தப் புதிய புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில், "நாம் அமெரிக்க குடிமக்கள் மட்டுமல்ல , பூமியின் குடிமக்கள்" என பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.