ரமலான் மாதத்தையொட்டி மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ரமலான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உள்ளிட்ட 150 பேர் கொல்லப்பட்டனர். உலகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிரான தடையை நீக்கி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. அன்று முதல் தொடர்ந்து அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புனித ரமலான் மாதத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் மரண தண்டனைகளை நிறைவேற்ற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த வெள்ளியன்று இதற்கான அறிவிப்பை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவை நடைமுறைப் படுத்துமாறு மாகாண அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, மரண தண்டனைக்கு எதிரான தடையை அமல்படுத்தவேண்டும் என்று ஐ.நா, ஐரோப்பிய யூனியன், அம்னஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பாகிஸ்தானை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.