அமெரிக்கா செல்லும் மோடிக்கு காத்திருக்கும் பிரமாண்ட வரவேற்பு
வாஷிங்டன்: வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க இந்திய-அமெரிக்க மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார். அவர் நியூயார்க் நகரில் நடக்கும் வருடாந்திர பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்.

இந்நிலையில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அங்கு வாழும் இந்திய-அமெரிக்கர்கள் திட்டமிட்டுள்ளனர். நியூயார்க்கில் உள்ள யான்கீ ஸ்டேடியம் அல்லது நியூ ஜெர்சியில் உள்ள ஜெயன்ட்ஸ் ஸ்டேடியம் ஆகிய ஏதாவது ஒன்றில் வரவேற்பு விழாவை நடத்த உள்ளனர். மோடி வரும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பபடவில்லை. இந்நிலையில் இந்த வரவேற்பு விழா செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெறக்கூடும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பரத் பராய் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு விழா தவிர மாபெரும் பேரணியை நியூயார்க் அல்லது நியூ ஜெர்சியில் நடத்தவும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதல்முறையாக அமெரிக்கா செல்கிறார். குஜராத் கலவரத்திற்கு பிறகு அமெரிக்கா மோடிக்கு விசா வழங்காமல் இருந்து வந்தது. தற்போது அவர் பிரதமர் ஆன பிறகு தான் விசா கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications