ஐ.எஸ். தீவிரவாதிகளை தாக்கிய ஒபாமா பெயரை குழந்தைகளுக்கு சூட்டும் குர்து இன மக்கள்!
சுருக், துருக்கி: சிரியாவைச் சேர்ந்த குர்து இன மக்கள் அமெரிக்க படையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ஒபாமா என்று பெயரிட்டு வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தங்களைக் காக்க அமெரிக்கப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களால் நெகிழ்ந்து இதுபோல பெயர் சூட்டுகின்றனர் குர்து இன மக்கள்.
அயின் அல் அரப் என்ற ஊரைச் சேர்ந்த சுல்தான் முஸ்லீம் என்ற குர்து இன நபர் தனக்குப் பிறந்த 7வது குழந்தைக்கு ஒபாமா என்று பெயர் சூட்டியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தனது குழந்தை துருக்கியில் பாதுகாப்புடன் பிறக்க அமெரிக்கப் படையினரே காரணம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
நிம்மதி...
சிரிய எல்லைப் பகுதியில் உள்ள கொபானி என்ற குர்து பிரேதசத்தில் வசிக்கும் அனைவருமே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்தவர்கள் ஆவர். தற்போது அமெரிக்கப் படையினர் நடத்தி வரும் விமானத் தாக்குதலால் இவர்கள் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து சற்று தப்பி நிம்மதியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரசவம்...
சுல்தான் முஸ்லீம் கர்ப்பமாக இருந்தபோது கொபானியிலிருந்து தனது கணவர் மற்றும் ஆறு குழந்தைகளுடன் எல்லையைக் கடந்து துருக்கிக்குள் சென்றார். அங்குதான் அவருக்குப் பிரசவம் நடந்தது. தான் பாதுகாப்பாக துருக்கிக்குச் செல்வதற்கு அமெரிக்கப் படையினர் எடுத்த நடவடிக்கையே காரணம் என்று இவர் நன்றியுடன் கூறுகிறார்.
அமெரிக்கப் படையினர்...
கடந்த சில வாரங்களாக கொபானி பகுதியில் அமெரிக்கப் படையினர் தொடர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அங்கிருந்து தீவிரவாதிகள் விலகி ஓடி வருகின்றனர். மேலும் முன்னேற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
நன்றிக்கடன்...
35 வயதாகும் சுல்தான் தற்போது சுருக் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளார். இது துருக்கிக்குள் உள்ளது. தனது குழந்தைக்கு ஒபாமா என்று பெயர் சூட்டியது குறித்து அவர் கூறுகையில், நான் இதயப்பூர்வமாகவே இந்தப் பெயரைச் சூட்டியுள்ளேன். இதை மாற்றவே மாட்டேன். அவர்தான் விமானங்களை அனுப்பினார், உதவிகளை அனுப்பினார்.
நிம்மதி...
எங்களைப் போன்ற மக்கள் இன்று நிம்மதியுடன் இருக்க முடிகிறது என்றால் அமெரிக்க விமானப்படையினர்தான் முக்கியக் காரணம். இந்தக் கொடுமையிலிருந்து நாங்கள் விரைவில் எங்களது வீடுகளுக்குச் செல்லக் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
அவதி...
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் எல்லையில் பல நாட்களாக தவித்து வந்தோம். தண்ணீர் இல்லை, உணவு இல்லை. உடுத்த உடை கூட இல்லை. போர்வை இல்லை. கர்ப்பிணியாக நான் பெரும் தவிப்புக்குள்ளாகியிருந்தேன். குளிக்கக் கூட முடியாத நிலை என்றார் அவர்.
குர்துகளாகப் பிறந்தது தவறா...?
சுல்தான் முஸ்லீமின் கணவரான மஹ்மூத் பெக்கோ கூறுகையில், எங்களது மகனுக்கு முகம்மது ஒபாமா முஸ்லீம் என்று பெயர் வைத்துள்ளோம். எங்களுக்கு ஒபாமா மேலும் உதவ வேண்டும். நாங்கள் வீடு திரும்ப உதவ வேண்டும். நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். ஆனால் குர்து என்பதால் தாக்கப்படுகிறோம். நாங்கள் குர்துகளாகப் பிறந்தது எங்களது தவறா என்றார் அவர்.
ஒபாமா... ஒபாமா...
இவர் மட்டுமல்ல மேலும் பலரும் கூட தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒபாமா என்று பெயரிட ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளனர். சுருக் பகுதியில் ஏராளமான துருக்கியர்களும், குர்துக்களும் கூடியுள்ளனர். அமெரிக்க விமானப்படை தீவரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அவர்கள் ஒபாமா ஒபாமா என்று குரல் கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.