ஈரானில் வைத்து சுற்றி வளைக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்.. 3வது முயற்சியில் படுகொலை! திசைமாறும் இஸ்ரேல் போர்
தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் அவருடைய மெய்காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார் என ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.
இவர் மீது கடந்த 2004ம் ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. வீட்டில் இருக்கும் நேரமாக பார்த்து இவரது வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் அவர் உயிர் பிழைத்துவிட்டார். அதேபோல 2019ம் ஆண்டு காசாவில் இவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது அவர் அலுவலகத்தில் இல்லை. எனவே உயிர் பிழைத்துக்கொண்டார். இருப்பினும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

ஈரானில் புதிய அதிபர் பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இஸ்மாயில் வந்திருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இஸ்மாயில் மற்றும் அவருடைய மெய்பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை ஹமாஸ் உறுதி செய்திருக்கிறது.
இந்த கொலை தொடர்பாக ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “நமது தலைவர் முஜாஹித் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய ஈரானிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேலின் துரோகிகளால் நமது தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்” என தெரிவித்திருக்கிறது.
அதேநேரம் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹமாஸ் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் பாலஸ்தீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
யார் இந்த இஸ்மாயில்: ஹமாஸில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பலர் இருந்தாலும், இஸ்மாயில் மிதவாதியாக அறியப்படுகிறார். இவருடைய குழந்தை பருவம் அகதிகள் வாழ்க்கையிலிருந்துதான் தொடங்கியது. ஹமாஸின் மற்ற தலைவர்களுடன் ஒப்பிடாமல், இவரை காசா மக்கள் தனி மரியாதையுடன் பார்த்து வந்தனர். குறிப்பாக போரை நிறுத்த இவர் மேற்கொண்டிருந்த பேச்சுவார்தையில் காசா மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்திருக்கிறார்.
ஹஸேம், அமீர் மற்றும் முகமது எனும் இவருடைய மூன்று மகன்கள், கடந்த ஏப்ரல் 10 அன்று இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நான்கு பேரக்குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.
இப்படி இருக்கையில் இவருடைய படுகொலை மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சர்வதேச அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் தயாராகி வந்த நிலையில், இந்த படுகொலை போரை மேலும் கோரமாக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அதரவு அமைப்பான ஹிஸ்புல்லா தலைவர் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications