விபத்தில் பலியான கணவரின் விந்தணு மூலம் குழந்தை... ‘களிமண்ணு’வை நிஜமாக்கிய காதல் மனைவி!
மெல்போர்ன்: விபத்தில் பலியான கணவரின் விந்தணுவை சேகரித்து, சட்டரீதியாக போராடி செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தையை பிரசவித்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
நிஜ சம்பவங்களை வைத்து சினிமாக்கள் தயாரிக்கப் படுவது உண்டு. அதே போல், சமயங்களில் சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடந்து விடுவதுண்டு. அப்படித் தான் மலையாளப் படக்கதை ஒன்று ஆஸ்திரேலியாவில் நிஜத்தில் நடந்துள்ளது.
கேரளாவில் பெரும் சர்ச்சையையும், பலத்த விவாதங்களையும் கிளப்பிய படம் ‘களிமண்ணு'. ஸ்வேதாமேனன் நாயகியாக நடித்த இப்படத்தில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவரின் விந்தணுவை சட்டப்பூர்வமாக போராடி பெற்று தாய்மை அடைவார் நாயகி.
இந்நிலையில், இதே போன்று தனது நிஜவாழ்க்கையில் போராடி தனது விபத்தில் உயிரிழந்த கணவருக்கு குழந்தைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய மனைவி ஒருவர்.
கோர்ட் அனுமதி...
ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த பெண் ஒருவர் விபத்தில் தனது கணவரை இழந்தார். ஆனால், இறந்து போன தனது கணவரின் வாரிசை உருவாக்க நினைத்த அப்பெண், அடிலெய்டு நீதிமன்றத்தை அணுகினார். கிட்டத்தட்ட 48 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு கோர்ட் அனுமதி அளித்தது.
செயற்கைக் கருவூட்டல்...
ஆனால் இப்படி செய்வது அடிலெய்டில் சட்ட விரோதமானது என்பதால் கன்னிபரா மாகாணத்திற்கு சென்று, ஐ.வி.எப். எனப்படும் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவை அவரது கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொண்டார்.
முதல் முயற்சியிலேயே...
வழக்கமாக இது போன்ற செயற்கை முறை கருத்தரிப்பில் முதல் முயற்சியிலேயே கரு உண்டாவது அபூர்வம். ஆனால், அப்பெண்ணின் அதிர்ஷ்டம் முதல் முயற்சியிலேயே கரு உண்டானது.
ஆரோக்கியமான குழந்தை...
அதேபோல், இறந்தவரின் உடலிலிருந்து விந்தணுவை எடுக்கும் இந்த சிகிச்சை முறை மூலமாக, 30 மணி நேரத்திற்குள் கருத்தரித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்ததே, சாதனையாக இருந்து வந்தது. ஆனால், 48 மணி நேரத்திற்கு பிறகு கருத்தரித்த இவர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகிறது.
அசாதாரணமான வழக்கு...
வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் இதை அசாதாரணமான வழக்கு என்கிறார்கள். அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்த ஆஸ்திரேலிய தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ராப்சன் இது தொடர்பாக கூறுகையில், "என்னுடைய பார்வையில், இது ஒரு காதல் கதை, எல்லையற்ற அன்பும் தைரியமும் கொண்ட அந்த பெண்ணுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். இந்த பெண் கடந்து வந்த தடைகள், அசாதாரணமான பொறுமை, அவர் கணவர் மீதான காதல் இவையெல்லாம் என்னுடன் பணியாற்றியவர்களை பிரமிக்க வைத்தது" என்றார்.