இஸ்லாம் தியாகி..நஸ்ரல்லாவுக்கு அடையாள இறுதி சடங்கு! விரைவில் நபியின் பேரன் உடலுக்கு அருகில் அடக்கம்
பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது. ஈரான் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி ஈரானில் இருந்து பிரார்த்தனை செய்யும் நிலையில், நஸ்ரல்லாவின் உடல் பின்னர் ஈராக்கில் உள்ள புனித கர்பலாவில் அடக்கம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான பேஜர், தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனானை சுற்றிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் தரைப்படை மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ள நிலையில் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதியான முகமது உசைன் ஸ்ரோர் பலியானார்.

தொடர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டதாக 27ஆம் தேதி தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா காயம் அடைந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சில தகவல்கள் உலாவின. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா மரணம் அடைந்ததாக ஹிஸ்புல்லாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் நஸ்ரல்லாவின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கிய நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக மற்ற இஸ்லாமிய நாடுகளும் களமிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தற்போது இஸ்ரேல் கொடூரமாக தாக்கி வரும் நிலையில், அவரது உடலை முறையாக ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக ஹசன் நஸ்ரல்லாவின் அடையாள இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது.
ஈரான் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி ஈரானில் இருந்து பிரார்த்தனை செய்யும் நிலையில், அவரது உடல் தூய்மை செய்யப்பட்டு பாதுகாக்கப்படும், மத்திய கிழக்கில் நிலைமை சீராகும் போது முறையான இறுதிச் சடங்குகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. தற்போது நிலைமை அங்கு மோசமாக இருக்கும் நிலையில், நஸ்ரால்லவின் உடலை அடக்கம் செய்வது தாமதமாகுமெனவே கூறப்படுகிறது. இந்த போதும் சிறிது கால இடைவேளைக்கு பிறகு அவரது உடல் ஈராக்கில் கர்பலா, அல்லது ஈரானில் நஜாஃப் பகுதியில் அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சுடானியின் ஆலோசகரான அப்துல் அமீர் அல் டீபான், நஸ்ரல்லாவின் உடல் கர்பாலாவில் இமாம் ஹுசைனுக்கு அருகில் அடக்கம் செய்யப்படும் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமின் புனித நகரங்களில் ஒன்றான பாக்தாத்தில் உள்ள கர்பலா நகரில் உள்ள முகமது நபியின் பேரனான இமாம் ஹுசைன் மசூதி தியாகிகளின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அங்கு ஹசன் நஸ்ரல்லாவின் உடல் அடக்கம் செய்யப்படும் நிலையில், இமாம் ஹுசைனின் 72 தோழர்களைப் போலவே, ஹசன் நஸ்ரல்லாவும் இஸ்லாமியர்களின் தியாகியாக கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications