பதுங்கி வாழ்ந்தார்; பயந்து வாழவில்லை - கலகங்களை காதலித்த சல்மான் ருஷ்டியின் கதை
கொலை மிரட்டல்களுக்கும், தொடர் அச்சுறுத்தல்களுக்கும் இடையே வாழ்க்கையை நடத்திய போதிலும் உயிருக்கு பயந்து ஒருபோதும் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் சல்மான் ருஷ்டி. அவரது கருத்துகள், எழுத்துகளில் பலருக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உலக அளவில் கருத்து சுதந்திரத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் பிறந்தததாலோ என்னவோ, சிறு வயது முதலே தனது சுதந்திரத்தையும், உரிமையையும் யாருக்காகவும் சல்மான் ருஷ்டி விட்டுக்கொடுத்ததில்லை.
Recommended Video
பால்ய பருவத்தில் இருந்தே இயற்கை மீது அலாதி பிரியம் கொண்டவரான சல்மன் ருஷ்டிக்கு ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள் எழுதுவதும் கைவந்த கலையாக மாறியது. பெரும்பாலும் தமது கதைகளில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலையே மையக்கருவாக வைத்திருப்பார் சல்மான் ருஷ்டி. மதங்களும், அவை சார்ந்த மூட நம்பிக்கைகளும் மனிதர்களின் வாழ்க்கையை எங்கனம் திசைமாற்றுகிறது என்பதையும் தனது கதைகளில் படம்பிடித்து காட்டியிருப்பார் சல்மான். அந்தக் காலக்கட்டத்தில் இருந்த எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிடும் போது சல்மான் ருஷ்டியின் எழுத்துகள் மிகவும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தன. ஆனால் 1970-களில் தான் அவரது புத்தகங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. அந்த சமயத்தில் வந்த பெரும்பாலான புத்தகங்கள் இந்தியா எவ்வாறு சுதந்திரம் அடைந்தது; அப்பொழுது நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை மையமாக வைத்தே வெளிவந்தன.

ஆனால், சல்மான் ருஷ்டியின் கற்பனை வேறு மாதிரியாக இருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த இரவையும், பாகிஸ்தான் பிரிவினையையும் இணைத்து ஒரு நாவலை எழுதினார் சல்மான். மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்ற அந்த நாவல் மக்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்றது. அந்த நாவலில் முதன்முறையாக மேஜிக்கல் ரியாலிசம் முறையை சல்மான் ருஷ்டி கையாண்டிருந்தார். அவரது நாவலின் நாயகன் சலீம் சினாயை, 'டெலிபதி' ஆற்றல் (பிறர் மனதில் நினைப்பதை அறியும் சக்தி) கொண்டவராக உருவாக்கி மதவாதிகளையும், இனவாதிகளையும் மறைமுகமாக சாடியிருப்பார். அந்த நாவலுக்கு புக்கர் விருதும் கிடைத்தது.
இவ்வாறு சென்றுக் கொண்டிருந்த சல்மான் ருஷ்டியின் எழுத்துகள், ஒருகட்டத்தில் மதங்களையும், மதவாதிகளையும் நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்தன.அப்படி அவர் எழுதி 1988-இல் வெளிவந்த புத்தகம்தான் தி சாட்டானிக் வெர்ஸஸ் (சாத்தானின் கவிதைகள்). இந்த புத்தகமே சல்மானின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. முஸ்லிம் மதத்தையும், முகமது நபியையும் இழிவுப்படுத்தும் வகையில் அந்த புத்தகம் இருப்பதாக கூறி நாடு முழுவதும் சல்மான் ருஷ்டிக்கு எதிராக போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன.இதன் ஒருபகுதியாக, சல்மான் ருஷ்டியின் சொந்த ஊரான மும்பையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
சல்மான் ருஷ்டியின் இந்த புத்தகத்துக்கு இந்தியாவையும் தாண்டி உலக அளவிலும் எதிர்ப்பு எழுந்தது. ஈரான் உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகள் அவரது புத்தகத்துக்கு தடை விதித்தன. இவை அனைத்துக்கும் மேலாக ஈரான் மத குருவான கோமெய்னி, சல்மான் ருஷ்டியை முஸ்லிம்கள் கொல்ல வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் அதிகம் வரத் தொடங்கின. அவரை கொலை செய்யும் முயற்சிகளும் நடந்தன. இதனால் இந்தியாவை விட்டு வெளியேறி குடும்பத்துடன் பிரிட்டனில் தஞ்சமடைந்தார் சல்மான் ருஷ்டி. எனினும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. சல்மானின் புத்தகங்களை வெளியிடுபவர்களும், மொழிபெயர்ப்பவர்களும் கொல்லப்பட்டனர். இதனால் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு சல்மான் ருஷ்டி குடிபெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கேயும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துக் கொண்டிருந்தன. இதனால் அமெரிக்காவிலேயே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டை மாற்றி மாற்றி குடியேறி வந்தார் சல்மான்.
ஆனால் இத்தகையை இக்கட்டான சூழ்நிலையிலும் தனது கொள்கையில் சமசரம் செய்து கொள்ளாமல் மதவாதிகளை விமர்சித்து தொடர்ந்து புத்தகங்களை எழுதி அவர் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி அவர் பல மாநாடுகளிலும் பேசி வந்தார். தனக்கு எதிர் கருத்து கொண்டவர்களின் கருத்து சுதந்திரத்துக்காகவும் அவர் போராடினார். உலக அளவில் கருத்து சுதந்திரத்தை விடாமல் வலியுறுத்தி வரும் ஆளுமைகளில் முக்கியமானவர் சல்மான் ருஷ்டி என்று சொன்னால் அது மிகையாது.
இவ்வாறு தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை தலைமறைவாகவே கழித்து வந்த சல்மான் ருஷ்டி, இப்போது கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஒருமுறை அமெரிக்காவில் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி கண்டனர். அப்போது, "ஏன் மதங்களை நீங்கள் மதிப்பதில்லை" என செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு சல்மான் ருஷ்டி அளித்த பதில்: "மதங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்" என்ற சொற்றொடர் நாளடைவில் "மதங்களுக்கு மனிதன் பயப்பட வேண்டும்" என் மாறிவிட்டது. மனிதன் பயப்படும் ஒரு விஷயம் குறித்து அவன் கேள்வி எழுப்ப மாட்டான். அதனால் மதங்களின் பெயரில் பல அநியாங்கள் நடக்க தொடங்கின. மதங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மதங்கள் மீது திணிக்கப்படும் புனிதம் அகற்றப்பட வேண்டும். மதங்கள் விமர்சிக்கப்பட வேண்டும். கேலி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள் ஒழியும்.












Click it and Unblock the Notifications