துரத்தும் சர்ச்சை.. இந்து மத நூல்களில் ஒரே ஆபாசம்.. சர்ச்சையை கிளப்பிய தாரிக் ரஹ்மான்.. யார் இவர்?
டாக்கா: ‛‛இந்து மதத்தின் வேதங்கள் எந்த முக்கிய போதனைகளையும் வழங்கவில்லை. அனைத்து மத நூல்களும் ஆபாச ஸ்கிரிப்டுகளாக உள்ளன'' என சர்ச்சையாக தாரிக் ரஹ்மான் பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது. யார் இவர்? எதற்காக இப்படி சர்ச்சையாக பேசினார்? என்பது பற்றிய ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் வங்கதேசம் தேசியவாத கட்சி, பயங்கரவாத அமைப்பாக கூறப்படும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் சேர்ந்து தற்போதைய பிரதமர் சேக் ஹசினா தலைமையிலான அரசுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறது.
தேர்தலுக்கு முன் தொடரும் மதமோதல்.. இந்து அமைப்பு தலைவர் மீது துப்பாக்கிச் சூடு.. பீதியில் கர்நாடகா
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
தேர்தல் மூலம் ஆட்சியை பிடிப்பதை விட குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற வங்கதேசத்தில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து விடுகிறது. இந்நிலையில் தான் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் முக்கிய நபராக அறியப்படும் நூருல் ஹக் நூர் அரசை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
பேஸ்புக்கில் வீடியோ வெளியீடு
இந்த நூருல் ஹக் நூரின் உதவியாளராகவும் வங்கதேசம் கோனே ஒடிகார் பரிஷத் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளருமான தாரிக் ரஹ்மான் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது மதசார்பற்ற கொள்கைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி தாரிக் ரஹ்மான், ‛‛இந்து மதத்தின் வேதங்கள் எந்த முக்கிய போதனைகளையும் வழங்கவில்லை. அனைத்து மத நூல்களும் ஆபாச ஸ்கிரிப்டுகளாக உள்ளன. நாட்டில் பத்திரிகையாளர்கள் அடிமைகளாக உள்ளனர். இவர்கள் என்னை பற்றி எந்த கேள்வியையும் எழுப்ப வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.
வெடித்த சர்ச்சை
இந்த பேஸ்புக் வீடியோவை அவர் சவூதி அரேபியாவில் இருந்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது இணையதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடந்த 2021ல் துர்கா பூஜையின்போது வங்காளதேசத்தில் மத அடிப்டைவாத சக்திகளால் தாக்குல் நடத்தப்பட்டது. இதில் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் பிஎன்பி கட்சி பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் நூருல் ஹக் நூரின் உதவியாளர் இப்படி வீடியோ வெளியிட்டுள்ளார்.
முன்பு நடந்தது என்ன?
வங்கதேசத்தில் தற்போது இந்துக்கள் உள்பட சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் 10 சதவீதத்துக்கு குறைவானவர்கள் தான் சிறுபான்மையினராக உள்ளனர். கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த வேளையில் இந்து உள்பட சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டனர். நில அபகரிப்பு, திருட்டு குற்றச்சாட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.