பாகிஸ்தானில் இந்து கோவில், சிலைகள் சேதம்! டூவீலர்களில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்! பதற்றம்
கராச்சி: பாகிஸ்தான் கராச்சி அருகே கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவிலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் தெய்வ சிலைகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவும் நிலையில் இந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று - என்ன வகை என ஆய்வு
இந்நிலையில் அவ்வப்போது இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், தெய்வ சிலைகள் சேதப்படுத்துவதையும் மர்மநபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பாகிஸ்தானில் இந்துக்கள்
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கீட்டின்படி மொத்தம் 75 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் அங்கு வசிக்கும் இந்துக்களின் எண்ணிக்கை 90 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்து மக்கள் சிந்து மகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
கராச்சி கோவில், சிலைகள் சேதம்
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கராச்சியில் உள்ள கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீமாரிமாதா கோவிலில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் தெய்வங்களின் சிலைகளை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டதை மறைக்கும் வகையில் துணிகள் கட்டப்பட்டது.
6 முதல் 8 நபர்கள்
இந்த சம்பவம் குறித்து அங்கு வசிக்கும் சஞ்சீவ் கூறுகையில், ‛‛6 முதல் 8 நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவிலில் நுழைந்து சிலைகளை தாக்கி உடைத்தனர். அவர்கள் யார்? எதற்காக தாக்கினர்? என்பது தெரியவில்லை. வந்த வேகத்தில் கோவிலை சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளோம்'' என்றார்.
அச்சத்தில் மக்கள்
சமீபகாலமாக பாகிஸ்தானில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் கோரங்கி பகுதியில் உள்ள கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றத்தால் அங்கு வசிக்கும் இந்து மக்கள் அச்சமடைந்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.