தூங்குவதற்கு இடைஞ்சலாக உள்ள காரை நகர்த்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண்
சாலையோரத்தில் தூங்கும் முதியவர் ஒருவர் அங்கிருந்த காரை நகர்த்த கூறியதால் ஆத்திரமடைந்த பெண் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
வாஷிங்டன்: சாலையோரத்தில் தூங்கும் முதியவர் ஒருவர் தனக்கு இடைஞ்சலாக உள்ளதாக அங்கிருந்த காரை சற்று நகர்த்துமாறு கூறியதால் ஆத்திரமடைந்த பெண், அந்த முதியவரை துப்பாக்கியால் சுட்டார்.
அமெரிக்காவின் நாஷ்வில்லேவை சேர்ந்தவர் ஜெரால்டு மெல்டன் (54). இவருக்கு வீடு இல்லாததால் சாலையோரத்தில் படுத்து உறங்குவது வழக்கம்.
மியூசிக் ரோ பகுதியில் உள்ள 19-ஆவது அவென்யூவில் அந்த முதியவர் உறங்கி கொண்டிருந்தார். அப்போது கடந்த மாதம் 26-ஆம் தேதி அவ்வழியாக வந்த எஸ்யூவி போர்ஷே கார் முதியவர் படுத்திருந்த இடத்துக்கு நேராக அதிகாலை வந்து நின்றது.
அசந்து தூக்கம்
அதிகாலை நேரம் என்பதால் சாலையில் படுத்திருந்தவர்களும், மெல்டனும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த காரின் எஞ்சின் சப்தமும், காரில் ஓடி கொண்டிருந்த பாட்டு சப்தமும் காதை பிளந்ததாக இருந்தது.
தூக்கம் கலைந்தது
இதனால் அங்கு படுத்திருந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் அந்த காரில் இருந்த பெண்ணிடம் சென்று காரை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறினார்.
ஆத்திரம் அடைந்த பெண்
இதனால் அந்த காரில் இருந்த கேத்தி க்வாகென்புஷ் என்ற பெண்ணுக்கும், முதியவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் அந்த பெண்ணுடன் வாதாட முடியாமல் தனது உறங்குமிடம் நோக்கி சென்றார்.
துப்பாக்கி சூடு
அப்போது காரில் இருந்த துப்பாக்கியால் அந்த முதியவரை அந்த பெண் சுட்டார். இதனால் அவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. பின்னர் அந்த பெண் காரில் ஏறி அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீஸார் தேடி வந்தனர்.
பெண் கைது
இந்நிலையில் அந்த பெண்ணை கடந்த திங்கள்கிழமை அன்று போலீஸார் கைது செய்தனர். அவருக்கு 25,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.