3வது முறையாக "கொல்லப்பட்ட" பாகிஸ்தான் தலிபான் தலைவர் பஸ்லுல்லா!
லாகூர்: ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பெஷாவர் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா பஸ்லுல்லா பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இறந்துவிட்டதாக 3வது முறையாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல் வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் புகுந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் 6 பேர் கண்மூடித்தனமாக சுட்டதில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்தது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா பஸ்லுல்லா(40). அவரை ரேடியோ முல்லா என்றும் அழைப்பார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பஸ்லுல்லா இறந்துவிட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்றாவது முறை
பஸ்லுல்லா இறந்தவிட்டதாக இத்துடன் மூன்றாவது முறையாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் அவர் இறப்பு குறித்த செய்தி வருவதும் அது உண்மை இல்லை என்று பின்னர் தெளிவுபடுத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
தீவிரவாதிகள்
பஸ்லுல்லா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகளும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இல்லை
ஆளில்லா விமான தாக்குதலில் தாலிபான் கமாண்டர் காரி இதாயத்துல்லா பலியாகிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாக பஜ்வோக் ஆப்கான் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் பஸ்லுல்லா பற்றி எதுவும் தெரியவில்லை.
2010
2010ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் பஸ்லுல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் பலியாகிவிட்டதாக முதலில் செய்தி வெளியானது. அந்த செய்தியை ஆப்கானிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் முகமது ஜமான் மாமோசாய் உறுதியும் செய்தார். ஆனால் பஸ்லுல்லா இறக்கவில்லை.
2014
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பஸ்லுல்லா இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
பஸ்லுல்லா
பஸ்லுல்லா மரணம் குறித்து தாலிபான்களே வேண்டும் என்றே பொய் செய்தியை பரப்பலாம் என்று கூறப்படுகிறது. அமைப்பினரை ஒன்றாக்கி வலுப்படுத்தியதில் பஸ்லுல்லாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்புக்கு பஸ்லுல்லா மிகவும் முக்கியமானவர்.