போரில் சரணடைந்தால் உயிர் பிழைப்பீர்கள்! உக்ரைன் போராளிகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
மாஸ்கோ: ‛‛உக்ரைன் மரியுபோல் நகரில் உக்ரைன் போராளிகள் ஆயுதங்களை கீழேபோட்டு விட்டு சரணடைய வேண்டும். முன்னேறி வரும் ரஷ்ய படைகளை எதிர்க்கும் உக்ரேனிய போராளிகள் தங்களை பாதுகாத்து கொள்ள ரஷ்யா மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. ஆயுதங்களைக் கீழே போடும் ஒவ்வொரு உக்ரைன் வீரரும் உயிர் பிழைப்பது உறுதி'' என ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 55வது நாளை எட்டியுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வான்வெளி, தரைவழி தாக்குதலை தொடர்வதால் உக்ரைனின் நகரங்கள் உருக்குலைந்துள்ளன. தற்போது கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.

தீவிரமான போர்
அதன்படி ஒரே இரவில் 16 உக்ரைன் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஐந்து ராணுவ மையங்கள், ஒரு எரிபொருள் கிடங்கு மற்றும் மூன்று வெடிமருந்து கிடங்குகள் சிதைக்கப்பட்டுள்ளன. மேலும் கார்கிவ், சபோரிஜியா, டொனெட்ஸ்க் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளிலும், மைக்கோலேவ் துறைமுகத்திலும் ரஷ்யா சார்பில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

உக்ரைன் அதிபரின் உரை
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி மக்களிடம் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார். நேற்று காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது, "கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது.ரஷ்யா நேற்று ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் அங்குள்ள நகரங்களைத் தாக்கியது. டான்பாஸ்க்கான போர் தொடங்கிவிட்டது" என தெரிவித்தார்.

ரஷ்யா எச்சரிக்கை
இந்நிலையில் தான் உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் வீரர்கள் தங்களது எதிர்ப்பை கைவிட்டு சரணடைய வேண்டும் என ரஷ்யா திடீரென அறிவுரையுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் போராளிகள் விவேகம் இல்லாத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதை நிறுத்துவதற்கு உரிய உத்தரவுகளை வழங்குமாறு உக்ரைன் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் பிறப்பிக்கவில்லை.

உயிர் பிழைப்பது உறுதி
இதனால் மரியுபோலில் உள்ள உக்ரைன் வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும். மரியுபோலில் முன்னேறி வரும் ரஷ்ய படைகளை எதிர்க்கும் உக்ரேனிய போராளிகள் பேரழிவில் சிக்கி உள்ளனர். இதில் பாதுகாத்து கொள்ள ரஷ்யா மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது. ஆயுதங்களைக் கீழே போடும் ஒவ்வொரு உக்ரைன் வீரரும் உயிர் பிழைப்பது உறுதி" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications