பாகிஸ்தானில் பதட்டம்.. ஆயிரக்கணக்கானோருடன் நாடாளுமன்ற முற்றுகையில் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், மத குரு தெஹிர் உல் குவாத்ரி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தடை உத்தரவை மீறி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இஸ்லாமாபாத்திலும் பாகிஸ்தானின் இதர பகுதிகளிலும் பதட்டம் நீடிக்கிறது.
அசம்பாவிதங்களைத் தடுக்க ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரெட் ஸோன் அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட உயர்மட்ட பாதுகாப்பு பிரேதசத்திற்குள் பல ஆயிரக்கணக்கானோருடன் இம்ரான் கான் புகுந்திருப்பதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இம்ரான் கான் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று அதிகாலையில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் உள்ள பகுதிக்குள் தடையை மீறி நுழைந்துள்ளனர்.
இவர்களைத் தடுத்து நிறுத்த போடப்பட்டிருந்த தடுப்புகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தபடி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். மேலும் இவர்களைத் தடுத்து நிறுத்த பெரிய கன்டெய்னர் பெட்டிகளை ராணுவம் சாலையின் குறுக்கே போட்டிருந்தது. ஆனால் கிரேனை வரவழைத்து அவற்றை போராட்டக்காரர்கள் அகற்றி விட்டனர்.
இன்று மாலைக்குள் நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கான் கெடு விதித்துள்ளார். அப்படி அவர் விலகாவிட்டால் ஷெரீப்பின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றும் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.