நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போராட்டம்: இம்ரான் கான் வாகனம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போராட்டம் நடத்தும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி பதவி ஏற்றார்.
ஆனால் பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக, தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் கரம் கோர்த்துக்கொண்டு, நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
மேலும், லாகூரில் இருந்து நேற்று அணிவகுத்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சென்று நவாஸ் ஷெரீப் அரசு பதவி விலகும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இம்ரான்கானும், தாஹிர் உல் காதிரியும் அறிவித்தனர். அதன்படி அங்கு இரு கட்சியினரும் அணி வகுத்து செல்கின்றனர்.
இம்ரான் கான் தலைமையில் தொண்டர்கள் அணிவகுத்து சென்றபோது குஜ்ரன்வாலா என்ற இடத்தில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக நவாஸ் ஷெரீப் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்தை கோட்டை அரண் போல மாற்றி விட்டது. அந்த நகருக்கு செல்கிற எல்லா நுழைவாயில்களும் அடைத்து சீல் வைக்கப்பட்டு விட்டன.
தலைநகருக்குள் அரசு எதிர்ப்பு போராட்டக்குழுவினர் நுழைந்தால் அவர்களை தடுத்து நிறுத்துகிற வகையில், 25 ஆயிரம் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.