கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் இல்லை
கோலாலம்பூர்: மலேசிய விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் விமானத்தின் பாகங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் ரேடார் தகவல் மூலம் விமானத்தை தேடும் இடம் மாற்றப்பட்டது.
புதிய இடம்
விமானத்தை இதுவரை தேடி வந்த இடத்தில் இருந்து வடகிழக்கே 700 மைல் தொலைவில் உள்ள இடத்தில் தற்போது தேடல் பணி நடந்து வருகிறது.
விமானங்கள்
கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட சீனா மற்றும் ஆஸ்திரேலியா விமானப்படை விமானங்கள் இரண்டு கடலில் பல பொருட்கள் மிதப்பதை நேற்று கண்டன. இவை தவிர மேலும் 5 விமானங்களும் கடலில் பொருட்கள் மிதப்பதை கண்டன.
கப்பல்கள்
தேடல் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு கப்பல்கள் கடலில் மிதந்த பொருட்களை நேற்று முதல் தடவையாக கைப்பற்றின. எடுத்துப் பார்த்ததில் அவை விமானத்தின் பாகங்களும் இல்லை, அதில் இருந்து வந்த பொருட்களும் இல்லை என்பது தெரிய வந்தது.
மீனவர்கள்
விமானத்தை தேடும் இடத்தில் மீனவர்கள் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருட்கள் கூட மிதக்கலாம். அதனால் மிதக்கும் பொருட்களை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.