புதின் கொடுத்த பெரிய ஷாக்! பாதுகாப்பு துறையில் பெரிய மாற்றம்.. நெருங்கிய நண்பருக்கு கல்தா! என்னாச்சு
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 5ஆவது முறையாக பொறுப்பேற்ற புதின், திடீரென தனது நெருங்கிய நண்பரான செர்ஜி ஷோய்குவை பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது தான் பலருக்கும் சர்ப்ரைஸாக உள்ளது.
ரஷ்யாவில் புதின் தான் சர்வ வல்லமை கொண்ட தலைவராக இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலிலும் கூட அவர் வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5ஆவது முறையாக அவர் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே புதின் தரப்பில் இருந்து இப்போது மிக முக்கியமான உத்தரவு வந்துள்ளது. அதாவது உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சரை மாற்றியுள்ளார் புதின்.
மாற்றம்: கடந்த 2012 முதலே ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் செர்ஜி ஷோய்கு.. இவர் புதினுக்கு மிகவும் நெருக்கமான நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு ஆண்ட்ரி பெலோசோவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார் புதின்.. இது பலருக்கும் சர்ப்ரைஸ் தான்.
ஏனென்றால் ஒரு பக்கம் போர் தொடர்வதால், ராணுவத்தைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் அதன் அமைச்சராக இருப்பதே சரியாக இருக்கும். ஆனால், புதிதாகப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்டரி பெலசோ ஒரு பொருளாதார வல்லுநர் ஆவார். அவர் ரஷ்யாவில் முன்னாள் துணை பிரதமராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: போர் சூழலில் பொருளாதார வல்லுநரை ஏன் அமைச்சராக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "1980களின் நடுப்பகுதியில் சோவியத் யூனியன் எந்த சூழலில் இருந்ததோ அதேபோன்ற ஒரு சூழலில் தான் ரஷ்யா இருக்கிறது.. இப்போது ரஷ்யா செலவிடும் மொத்த செலவில் சுமார் 7.4% பாதுகாப்புத் துறைக்கே செல்கிறது. நாட்டின் நலனை உறுதி செய்யவே இவ்வளவு பெரிய தொகை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது.
அவை சரியாகச் செலவிடுவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.. இதன் காரணமாகவே பாதுகாப்பு அமைச்சராகப் பொருளாதார பின்னணி கொண்ட ஒருவர் இருக்க வேண்டும் என்பதை புதின் விரும்பினார். இது உக்ரைனில் நடக்கும் சிறப்பு ராணுவ நடவடிக்கையிலும் நமக்குப் பெரியளவில் உதவும்" என்றார்.
புதிய பொறுப்பு: நெருங்கிய நண்பரான பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் செர்ஜி ஷோய்குவை புதின் திடீரென நீக்கியது ஏன் என்ற கேள்வி பலருக்கும் வரலாம்.. ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக செர்ஜியை நியமிக்கவே பாதுகாப்புத் துறை அமைச்சர் பதிவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கிய நிலையில், அதன் பிறகு புதின் பாதுகாப்பு துறையில் மேற்கொண்ட மிக முக்கியமான மாற்றம் இதுவாகும். ரஷ்ய நாடாளுமன்றத்தில் புதின் கட்சியை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் புதினின் இந்த உத்தரவு மிக எளிதாக நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிருப்தி: அதேநேரம் ரஷ்யா போருக்கு ஓவராக செலவு செய்வதாக அந்நாட்டு மக்களிடையே அதிருப்தி அதிகரித்து இருந்தது. அதை சமாளிக்கும் வகையிலேயே புதின் அமைச்சரவையில் இந்த மாற்றத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications