அடுத்த 5 ஆண்டுகளில்... ரோபோக்களால் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் குறையும் ஒரு "ஷாக்" ரிப்போர்ட் !
தாவோஸ்: ரோபோக்களின் அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்களையும், எந்திர மனிதர்களையும் தொழிற்சாலைகளில் நிறுவும் முறை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தொழிலாளர்களுக்கு பதிலாக தானியங்கி ரோபோக்களை நிறுவி அதன் மூலம் வேலையை எளிதாக்கும் புதிய முறையும் பல்வேறு தொழிற்சைலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் ஆபத்து உள்ளதாக உலக பொருளாதார பேரவையின் பிரபல ஆய்வு ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்படும் சவால்களை பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வு.
ஐ.நா. அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஏற்கனவே ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது, வரும் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 10 லட்சம் வேலை வாய்ப்புகள் குறையும் அபாய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஒரு புதிய வேலை உருவானால் அதேநேரத்தில் ஏற்கனவே இருக்கும் 3 வேலை வாய்ப்புகள் மறையும் நிலை உருவாகும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.