இந்திய மிடில் கிளாஸ் வளர்ச்சி அமெரிக்காவுக்கு சவால்: ஒப்புக்கொண்டார் ஒபாமா
வாஷிங்டன்: இந்திய நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள, மிலிட்டரி அகாடமியில் அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா உரையாற்றினார். அப்போது இந்தியா குறித்த எச்சரிக்கை உணர்வு அவரது பேச்சில் பிரதிபலித்தது. ஒபாமா பேசுகையில், "பிரேசிலாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், அந்த நாடுகளின் நடுத்தர வர்க்கத்து மக்கள், பெற்றுள்ள வளர்ச்சி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக மாறியுள்ளது. வளரும் நாடுகள் சில நேரங்களில் சந்தை பொருளாதாரத்திலும், ஜனநாயகத்திலும் வளர்ந்த நாடுகளை ஆச்சரியப்படுத்திவிடுகின்றன.
24 மணி நேர செய்தி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும், பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த ஊடகங்களின் செயல்பாடு காரணமாக, மதக்குழுகளுக்கிடையேயான மோதல்கள் கவனிக்கப்படுகின்றன, பின்தங்கிய மாநிலங்கள் விமர்சிக்கப்படுகின்றன, வளரும் மாநிலங்கள் பாராட்டுக்கு உள்ளாகின்றன. முன்பெல்லாம், எப்போதோ கிடைக்கும் செய்திகளாகத்தான் இவை இருந்துவந்தன. இதுதான் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றார்.