Operation Sagar Bandhu: இந்தியாவில் இருந்து பறந்து இலங்கையில் இறங்கிய 80 டன் நிவாரண பொருட்கள்!
கொழும்பு: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயலாக மாறியது. டிட்வா புயலால் இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. பல ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் சுமார் 50 பேரும், பதுளை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கெலானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்புவிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அநுராதாபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர் இலங்கையின் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இலங்கையின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் இன்று 200 மி.மீ மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், "டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல், விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியுள்ளது. தேவை எழும் எனில் மேலும் உதவிகளை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து உறுதியுடன் நிற்கிறது. முக்கியமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ந்து உதவியாக இந்தியா இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சாகர் பந்து தொடங்குகிறது. தார்பாய்கள். போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படையின் C-130 J விமானம் கொழும்பில் தரையிறங்கியது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசு முறைப்படி உதவி கோரிய உடன், ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் உதவிக்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications