ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு உதவிய இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறை: யு.எஸ். கோர்ட்
நியூயார்க்: லெபனானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்தியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸில் வசித்து வந்தவர் பேட்ரிக் நாயர்(50). இந்தியரான அவர் கான்ராட் ஸ்டானிஸ்க்லாஸ் முல்ஹாலண்ட்(47) என்பவருடன் சேர்ந்து லெபனானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு உதவ முயன்றார். எப்.பி.ஐ.க்கு தகவல் தரும் நபர் ஒருவர் நாயரை அணுகி தான் தீவிரவாத அமைப்புக்கு அவர்கள் அளிக்கும் ஆயுதங்கள், வாகனங்களை கொண்டு சென்று கொடுப்பதாக தெரிவித்தார்.
இதை நம்பிய அவர்கள் அந்த நபரிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் டிரக் ஒன்றை அளித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். அந்த நபர் அதை எப்.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாயர் கைது செய்யப்பட்டார். முல்ஹாலண்ட் அவர் மீது குற்றம் சுமத்தும் முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார். அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அமெரிக்க குடிமகன் இல்லை.
இந்நிலையில் நாயருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மான்ஹாட்டன் பெடரல் நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது.