”ஓவர் டோஸ்” மருந்துகளால் 36 நோயாளிகள் மரணம்- அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் 36 நோயாளிகள் மருத்துவமனையில் தொடர்ந்து மரணமடைந்ததை அடுத்து இந்திய டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்துக்கு உட்பட்ட கிளேட்டன் கவுண்டியில் உள்ள ஜோன்ஸ்போரா பகுதியில் மனநல மருத்துவராக பணியாற்றி வருபவர் நரேந்திர நாகரெட்டி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரிடம் சிகிச்சை பெற்ற 36 நோயாளிகள் தொடர்ந்து மரணம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து டாக்டர் நரேந்திர நாகரெட்டிக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனால் இவரது சிகிச்சை முறை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மனநல மருத்துவரான இவர், வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கியதும், அதுவும் நியாயமற்ற காரணங்களுக்காக வழங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும் இறந்த 12 நோயாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, இவர் அவர்களுக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை வழங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் ஒபியேட், பென்சோடியாசெபைன் போன்ற மருந்துகளை கடந்த சில ஆண்டுகளாக இவர் தனது நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக வழங்கியதும் தெரியவந்தது.
இதனால் டாக்டர் நாகரெட்டிக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அவரது வீடு மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட அதிகாரிகள், நாகரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மருந்து ஆலை ஒன்றும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.