காதலுக்காக எல்லை தாண்டிய இந்திய இளைஞர்.. பாக்., சிறையில் சித்ரவதை!
கராச்சி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர், சக பாகிஸ்தான் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ஹமீது நெஹல் அன்சாரி (31). இவருக்கும் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி கோஹட் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் மலர்ந்தது. அவர்களின் காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தபோது அந்த பெண்ணுக்கு அவசர திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்.
இதை அறிந்த அன்சாரி கடந்த 2012-ம் ஆண்டில் மும்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்று அங்கிருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு ராணுவம் அவரை கைது செய்தது.
பின்னர் கடந்த 2015 டிசம்பரில் ராணுவ நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தற்போது பெஷாவர் சிறையில் அன்சாரி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்தில் சக கைதிகளால் அன்சாரி கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான குற்றங்கள் செய்யும் கைதிகள் அடைக்கப்படும் இருட்டு அறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும், சிறை அதிகாரிகள் காரணமின்றி தினமும் அன்சாரியை கொடூரமாக அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அவர் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் சிறைத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், சிறையில் கைதிகளுக்குள் சண்டை நடைபெறுவது வழக்கம், ஹமீதுக்கு மிகப் பெரிய காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்திய இளைஞருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.