சிங்கப்பூரில் காசை ‘தண்ணீராய்’ செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகள்... 3வது இடத்தில் இந்தியா!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிகம் செலவு செய்வோர் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரபல சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது சிங்கப்பூர். இங்கு இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் சுற்றுலா வந்த அயல்நாட்டவர்கள் குறித்தும், அவர்கள் செய்த செலவு குறித்தும் சிங்கப்பூர் அரசு சுற்றுலா வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கப்பூருக்கு இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் அந்நாட்டு அரசுக்கு 28.40 கோடி மில்லியன் சிங்கப்பூர் டாலர் வருவாய் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு சுற்றுலா வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
39 லட்சம் சுற்றுலாப் பயணிகள்....
சீனா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு 2014ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில், 39 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
வருவாய்...
அவர்கள் மூலம், 600 கோடி சிங்கப்பூர் டாலர்கள் வருவாய் கிடைத்துள்ளது.
சீனர்கள்...
இதில், சீனாவில் இருந்து வந்த 5.57 லட்சம் பேர், 80 கோடி சிங்கப்பூர் டாலர்களை செலவு செய்தனர்.
2ம் இடத்தில்...
இதையடுத்து, இந்தோனேசியாவில் இருந்து வந்த 7.49 லட்சம் சுற்றுலாப் பயணிகள், 65.80 கோடி சிங்கப்பூர் டாலர்களை செலவு செய்தனர் என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப்பயணிகள்...
மேலும், இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 65,557 இந்தியர்களும், பிப்ரவரி மாதம் 62, 999 இந்தியர்களும், மார்ச் மாதம் 70,472 இந்தியர்களும் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
உயர்வு...
ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 79,522 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.