இந்தோனேசியா பயங்கர நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக கிடுகிடு அதிகரிப்பு
ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சியாஞ்சூர் நகரத்தின் கீழே 10கி.மீ ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6ஆக பதிவாகி இருந்தது. அதேநேரத்தில் இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவிலும் இப்பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.
குலுங்கிய இந்தோனேசியா! சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்.. 46 பேர் பலி, 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்
162 பேர் பலி
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 162 பேர் பலியாகி உள்ளனர். சியாஞ்சூர் மருத்துவமனை ஒன்றில் மட்டுமே 400க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனராம். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர் நிலநடுக்கம்
மேற்கு ஜாவாவின் சுக்காபுமி, போகோர் உள்ளிட்ட பல இடங்களிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அங்கு கட்டடங்கள் குலுங்குவதை உணர்ந்ததாக ஜகார்த்தா பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவாதான் மிக மோசமாக நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்படக் கூடிய நிலப்பரப்பாகும். நெருப்பு வளையம் என்ற புவியல் வரையறைப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பது முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஜாவா தீவையே இந்தப் பெருநிலநடுக்கம் சீர்குலைத்து போட்டிருக்கிறது என்கின்றன ஊடக தகவல்கள்.
ஜகார்த்தா அதிர்ச்சியில் உறைந்தது
அதேநேரத்தில், இத்தகைய நிலநடுக்கங்கள் எங்களுக்குப் பழகிவிட்ட ஒன்றுதான். ஜகார்த்தாவில் வசித்தாலும் நிலநடுக்க அதிர்வுகளை அவ்வப்போது உணர்ந்துதான் இருந்தோம். இந்த முறை ஜாவா நிலநடுக்கமானது 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜகார்த்தாவை உலுக்கிய விதம் பெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது என்கின்றனர் பொதுமக்கள். மேலும் ஜகார்த்தாவில் சிலநொடிகள், சில நிமிடங்கள்தான் நிலநடுக்கம் நீடிப்பது வழக்கம். இந்த முறை ஜாவை மையமாக கொண்டு உருவான நிலநடுகமானது ஜகார்த்தாவில் சிலநிமிடங்கள் வலுவான அதிர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தியது. அதுதான் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது எனவும் கூறுகின்றனர்.
பகிரப்படும் படங்கள், வீடியோக்கள்
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளது. இந்தோனேசியா நிலநடுக்க சேதங்கள் தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் இடைவிடாமல் ஏற்படுவதாகவும் இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.