மோடி அரசின் தவறான ஆட்சியால் ஐஎஸ்ஐஎஸ் போல இந்தியாவிலும் குழுக்கள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
பெர்லின்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வேலைவாய்ப்பின்மையால் உருவானதை போல, இந்தியாவிற்கும் ஆபத்து காத்துள்ளது என்று ஜெர்மனியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 4 நாள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சென்றுள்ளார். இன்று, ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரிலுள்ள Bucerius Summer School-ல் நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை விட்டு விளாசிவிட்டார் அவர்.
ராகுல் காந்தி கூறியதாவது: பணமதிப்பிழப்பு திட்டம் என்பது மிக மோசமான வகையில் அமல்படுத்தப்பட்டது. பல கோடி பேரை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழக்க காரணமாகியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை வெறுப்பு
தலித்துகள் சிறுபான்மையினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இந்தியாவில் வன்முறை சம்பவங்கள், குழு வன்முறைகள் அதிகரிக்க காரணம், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் நசிவு காரணமாக ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான். இந்திய அரசு, பழங்குடியினர், ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்ட ஜாதி பிரிவு மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய வசதிகள் கிடைக்க விடாமல் செய்து வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் வேலையை அரசு செய்து வருகிறது.

ஈராக் சம்பவம்
நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது அவசியம். அனைத்து தரப்பிற்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த 21ம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி இல்லை என்றால் அது மிகப்பெரிய ஆபத்தை நோக்கிச் செல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் உள்ளது. 2003ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு குறிப்பிட்ட இனத்தவர்களை, அரசு பணிகளிலும் ராணுவத்திலும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளவில்லை.

ஐஎஸ்ஐஎஸ் பரவியது
இவர்கள் பின்னாளில் புரட்சிப் படையை உருவாக்கினார். அமெரிக்காவை எதிர்த்த புரட்சிப்படையினரால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் அது எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் பரவியது. சிரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவிய அதன் பெயர் ஐஎஸ்ஐஎஸ். வன்முறையால் நானே பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்கு ஒரே தீர்வு மன்னிப்பு தான்.

மன்னிப்பே தீர்வு
எனது தந்தை 1991 ஆம் ஆண்டு தீவிரவாதியால் கொல்லப்பட்டார். அந்த தீவிரவாதி சில வருடங்கள் கழித்து இறந்த போது நான் மகிழ்ச்சி அடையவில்லை. அவரது பிள்ளைகளில் என்னைதான், நான் பார்த்தேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வை தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

வெறுப்பு தேவையில்லை
ராகுல்காந்தி மேலும் கூறுகையில், பிரதமர் மோடி என் மீது வெறுப்பை கக்கும் வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆனால் நான் அவர் மீது அன்பை தான் காட்டினேன். வெறுப்பை, வெறுப்பால் எதிர்கொள்வது என்பது முட்டாள்தனமான நடவடிக்கை. எந்தப் பிரச்சனையையும் அது சரி செய்யாது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பதை ஒரு பெரிய பிரச்சனையாக மோடி பார்க்க மறுக்கிறார். ஒரு பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமென்றால் அது எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள மனம் வேண்டும்.

ஆண்கள் மனநிலை மாறவில்லை
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் என்பது அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். இந்தியா மாற வேண்டியுள்ளது. பெண்களை தங்களுக்கு சமமானவர்களாக ஆண்கள் நினைக்க வேண்டும். ஆனால் என்னை, மன்னித்துக்கொள்ளுங்கள்.. ஆண்கள் அவ்வாறு நினைப்பது கிடையாது. வன்முறையற்ற அகிம்சைப் என்பதுதான் இந்தியாவின் அடிப்படை தத்துவம். இந்தியனாக இருப்பதற்கு தேவையான அடிப்படை விஷயம் அது தான். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications