சில அரசு நல்ல விஷயங்களை தடுக்கும்.. மத்திய அரசை மறைமுகமாக கிண்டல் செய்கிறாரா அமீரக பிரதமர்?
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் டிவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் டிவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்திய மத்திய அரசை குற்றம்சாட்டி டிவிட் செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வெள்ளம் இப்போதுதான் வடிய தொடங்கியுள்ளது. கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் உதவி
மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. கேரளாவில் வெள்ளம் என்றவுடன், அரபு நாடுகள்தான் மிகவும் அதிகஅளவு உதவிகளை செய்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 700 கோடி கொடுப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து கேரளா மாநில முதல்வரும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
என்ன பிரச்சனை
ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதன்பின் கேரளாவிற்கு பணம் கொடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல்பன்னா தெரிவித்துள்ளார். இதுவரை பணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
|
முதல் டிவிட் என்ன?
இந்த நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு டிவிட்டுகளை வெளியிட்டு இருந்தார். முதல் டிவிட்டில் ''இரண்டு விதமான அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். முதல்வகை அதிகாரிகள் நல்லவர்கள், அவர்கள் மக்களுக்கு உதவுவார்கள். மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதில் ஆனந்தம் காண்பார்கள், அவர்களின் உண்மையான சாதனை என்பது வாய்ப்புகளை அளித்து வாழ்க்கையை மாற்றுவதே. அவர்கள் தீர்வுகளை அளிப்பார்கள். மக்கள் நலனையே எதிர்பார்ப்பார்கள்'' என்றுள்ளார்.
|
இரண்டாவது டிவிட்
அடுத்த டிவிட்டில் ''இன்னொரு வகையான ஆட்சியாளர்கள், நல்ல விஷயத்தை தடுப்பார்கள், மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவார்கள். மக்கள் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து ஆனந்தம் அடைவார்கள்'' என்று கூறியுள்ளார்.
|
மத்திய அரசா ?
இந்த நிலையில் இந்த இரண்டாவது டிவிட் இந்திய மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக எல்லோரும் டிவிட் செய்துள்ளனர். முக்கியமாக மலையாளிகள், இது மத்திய அரசை அப்படியே குறிக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் இந்த டிவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.