பாலஸ்தீன நாடாளுமன்ற சபாநாயகரை வீடு புகுந்து கைது செய்த இஸ்ரேல் ராணுவம்
ரமல்லா: பாலஸ்தீன நாடாளுமன்ற சபாநாயகர அஜீஸ் திவெய்க்கை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இஸ்ரேலின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள மார்க்க பள்ளியில் படித்து வந்த 3 சிறுவர்கள் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டனர். அவர்களை பாலஸ்தீனத்தில் செயல்படும் இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் தான் கடத்தியது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே பிரச்சனையாக உள்ள இஸ்ரேல், பாலஸ்தீன உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடேயே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முயன்று தோல்வி அடைந்த நேரத்தில் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளரான ஜான் கெர்ரி பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹு ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சிறுவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட 80 பாலஸ்தீனர்களை கடந்த சனிக்கிழமை கைது செய்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பாலஸ்தீன நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், மூத்த ஹமாஸ் தலைவருமான அஜீஸ் திவெய்க்கை ஹெப்ரான் நகரில் வைத்து இன்று அதிகாலை கைது செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனத்தில் உள்ள ஹெப்ரான் நகரில் இருக்கும் அஜீஸின் வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளால் இருநாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.