அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரின் போன் பேச்சை ஒட்டுக்கேட்ட இஸ்ரேல்: ஜெர்மனி வார இதழ் புது குண்டு
பெர்லின்: அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த ஆண்டு பாலஸ்தீனியர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதை இஸ்ரேல் ஒட்டுக்கேட்டுள்ளது என்று ஜெர்மனியைச் சேர்ந்த வார இதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாலஸ்தீனியர்களுடன் கடந்த ஆண்டு முதல் முறையாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கெர்ரி மத்திய கிழக்கு நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த பேச்சுகளை இஸ்ரேல் மற்றும் ஒரு ரகசிய உளவுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த வார இழதான டெர் ஸ்பீகல் தெரிவித்துள்ளது.
கெர்ரி, பாதுகாப்பான இணைப்புகள் தவிர ஒட்டுக்கேட்க முடியும் இணைப்புகள் மூலமாகவும் அதிகாரிகளுடன் பேசியுள்ளார். இந்த தகவலை இஸ்ரேல் ஒட்டுக்கேட்டு அதை பேச்சுவார்த்தையின்போது பயன்படுத்தியுள்ளதாக அந்த வார இதழ் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து கெர்ரியின் அலுவலகம் மற்றும் இஸ்ரேல் அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த கெர்ரி கடந்த வாரம் இஸ்ரேல் சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது என்பது நினைவிருக்கலாம்.