திடீர் பயணம்... ஈராக்கின் குர்திஷ் பகுதிக்குச் சென்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி
அர்பில்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தனது பாக்தாத் பயணத்தைத் தொடர்ந்து குர்திஷ் மக்களின் சுயாட்சிப் பகுதிக்கு சென்றார்.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஈராக் சிதறுண்டு போய்க் கொண்டுள்ள நிலையில் அதைத் தடுத்து அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஜோர்டானில் இருந்து ஈராக்குக்கு சென்றுள்ளார் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. அங்கு அவர் ஈராக் அரசு தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆலோசித்தார்.
பாக்தாத்தில் ஈராக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் குர்திஷ் பகுதிக்கு வந்தார் கெர்ரி. சன்னி போராளிகளைக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கெர்ரியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது.
மேலும், குர்திஷ் பகுதியை தனி நாடாக பிரகடனம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வருவதால் கெர்ரியின் குர்திஷ் பகுதி பயணம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அர்பில் நகருக்கு வருகை தந்த கெர்ரி, குர்திஷ்தான் அதிபர் மஸ்த் பர்ஸானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஈராக்குடன் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு கெர்ரி எடுத்துரைத்தார்.
அனைத்து ஈராக் மக்களுக்கும் நலம் பயக்கும் வகையில் குர்திஷ்தான் பிராந்தியம் செயல்பட வேண்டும் என்றும் ஈராக் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு காலத்தில் சதாம் உசேனால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளானவர்கள், ஈராக்கிய குர்திஷ் இனத்தவர் என்பது நினைவிருக்கலாம். தற்போதைய ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலின் பின்னணியில் அவர்கள் தனி நாடாக பிரிந்து போக ஆயத்தமாகி வருகிறார்கள். ஆனால் இதை ஈராக் விரும்பவில்லை, எதிர்த்து வருகிறது.
அதேசமயம், ஈராக் பிரதமர் பதவியிலிருந்து நூரி அல் மாலிக்கி விலக வேண்டும் என்று பர்ஸானி வலியுறுத்தியுள்ளார். காலம் மாறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக எங்களால் முடிந்ததைச் செய்து விட்டோம். ஈராக்கை ஜனநாயக நாடாக கட்டியமைக்க முயற்சித்தோம். ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது. தற்போது குர்திஷ்தான் மக்கள் தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கேற்ற முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.