காபூலில் நாள்தோறும் தேடித் தேடி மிகக் கொடூரமாக கொல்லப்படும் தெருநாய்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தெருவில் திரியும் நாய்களை தேடித் தேடி கொலை செய்து புதைத்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
காபூலில் தெருநாய்கள் தொல்லையால் ரேபீஸ் நோய் தாக்கி பலரும் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் காபூல் நிர்வாகம் தெருநாய்களைத் தேடி தேடி கொலை செய்ய முடிவு செய்தது.
இதற்காகவே 'நாய் பிடிப்பவர்கள்' பலரையும் பணியில் அமர்த்தியுள்ளது. இவர்களது முதன்மையான பணி தெருவில் திரியும் நாய்களை பிடித்து கொலை செய்வது என்பதுதான்.
வலை வீச்சு
நாய்களைத் தேடி ஒரு டிரக் வண்டியில் நான்கைந்து பேர் கொண்ட குழு செல்கிறது. நாய்களைக் கண்டவுடன் அவற்றின் மீது வலைகளை வீசுகின்றனர்.
அடக்குதல்
வலைகளில் சிக்கி போராடும் நாயின் காலை கயிறால் கட்டி விடுகின்றனர். அதையும் மீறி துள்ளும் நாய்களின் கழுத்தில் பெரிய தடி கொண்டு அல்லது மிகப் பெரிய பூட்ஸ்கள் துணை கொண்டு அமுக்கப்படுகிறது.
விசம் கொடுத்தல்
பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து நாயை அமுக்கிப் பிடிக்க அதன் வாயில் ஒரு ஸ்பூன் விசம் ஊட்டப்படுகிறது. சட்டென நாய் மயங்கி விடுகிறது. அந்த நாய் ட்ரக் வண்டிகளில் தூக்கி எறியப்படும்.
மெல்ல மெல்ல மரணம்
பின்னர் நாய் மெல்ல மெல்ல மரணத்தைத் தழுவிவிடும். இப்படி கொல்லப்படும் நாய்கள் ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் புதைக்கப்பட்டு விடுகிறது.
17,600 நாய்கள் கொலை
இந்த நாய்வேட்டை நாள்தோறும் நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு மட்டும் 17,600 நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
நாய் கொலைகள் மிகவும் கொடூரமாக இருந்தாலும் இதன் மூலம் தாங்கள் நிம்மதி அடைகிறோம் என்பது காபூல்வாசிகளின் கருத்து.