ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா மரண தண்டனை ஒத்திவைப்பு.. கடைசிக்கட்டத்தில் திடீர் திருப்பம்!
சானா: ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில் வேலைக்கு சென்ற கேரள நர்ஸ் நிமிஷா பிரியா கொலைக் குற்றச்சாட்டில் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டு இருக்கிறார். அவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் நாளை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சூழல் இருந்தது.

மரண தண்டனை நிறுத்தி வைப்பு
இந்தச் சூழலில் இன்று கடைசி கட்டப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்நாட்டின் தலைநகர் சானாவில் அமைந்துள்ள சிறையில் தான் நிமிஷா பிரியா அடைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஹவுதி கிளிர்ச்சியாளர்கள் அரசுக்கும் இந்தியாவுக்கும் தூதரக தொடர்பு எதுவும் இல்லை. இதனால் துல்லியமாக அங்கு என்ன நடக்கிறது என்பது தெரிவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு சம்மதம்
மேலும், இப்போது தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்க பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் நிரந்தரமாக அவருக்கு மரண தண்டனை கிடையாது என்றோ அல்லது அவர் இந்தியா திரும்புவார் என்றோ அர்த்தமாகாது. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், அதில் அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தே எல்லாம் அமையும்.
ரத்த பணம்
அங்குள்ள சட்டப்படி கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களுக்கு ரத்த பணம் கொடுக்கலாம். அதாவது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து மன்னிப்பை கோரலாம். அதேநேரம் இவ்வளவு பணம் தான் தர வேண்டும் என நிபந்தனை இல்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் விரும்பிய தொகையை கேட்கலாம். பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டிற்கு கொண்டு வரலாம். மேலும், ரத்த பணத்தை நிச்சயம் ஏற்று மன்னிக்க வேண்டும் என்றும் விதி இல்லை. அது அவர்களின் விருப்பம் தான்!
என்ன நடந்தது!
நிமிஷா பிரியா விவகாரத்தில் ரூ.11 கோடி வரை ரத்த பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். இருப்பினும், நேற்று வரை பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் இதில் எந்தவொரு பதிலையும் தராமலேயே இருந்தனர். இந்தச் சூழலில் தான் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதித்துள்ளனர். இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் எடுத்த முயற்சியே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஹவுதி நாட்டின் மத அதிகாரிகளுடன் இவரே நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதன் பிறகே மஹ்தி குடும்பத்தினர் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி
ஏமன் நாட்டில் வேலைக்கு சென்ற நிமிஷா பிரியா அங்கு உள்ளூரை சேர்ந்த மஹ்தி என்பவருடன் சேர்ந்த கிளினிக்கை தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் நன்றாக போன போதும், ஒரு கட்டத்தில் மஹ்தி பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்து கொண்டு மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள முன்னாள் ஜெயிலர் ஒருவர் அளித்த ஐடியாவின்படியே மஹ்திக்கு மயக்க ஊசி போட்டு பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், மயக்க மருந்து அதிகமாகிவிடவே மஹ்தி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications