குல்பூஷண் ஜாதவை தூக்கில் போட மாட்டோம்... உறுதியளித்த பாகிஸ்தான்
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை தூக்கில் போடமாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்: கருணை மனு உரிமையை இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் நிறைவேற்றிக்கொள்ளும் வரையில், அவரைத் தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு , மரண தண்டனை விதித்து, அந்த நாட்டின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஏப்ரல் மாதம் 10ம் தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியா, திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில், தான் இறுதி முடிவு எடுக்கும் வரையில், ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அவரின் தாயார், மேல் முறையீடு செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜாதவுக்கு எதிராக தீர்ப்பு அமையுமானால், அவரை உடனே தூக்கில் போட வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " சர்வதேச நீதிமன்றம் கடந்த 18ம் தேதி பிறப்பித்த தற்காலிக உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், முதலில் ராணுவ தளபதியிடமும், அடுத்து ஜனாதிபதியிடமும் கருணை கோரும் மனு உரிமையை தீர்த்துக்கொள்ளும் வரையில், குல்பூஷண்ஜாதவை தூக்கில் போட மாட்டோம். அவர் உயிருடன் இருப்பார்." என்று தெரிவித்துள்ளார்.