சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைவு
லண்டன்: பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் இங்கிலாந்தில் காலமானார். அவருக்கு வயது 80.
இந்தியாவில் பிறந்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சென்னை பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர்.
நவீன தமிழ் இலக்கியங்களை தனது நேர்த்தியான ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றவர் லட்சுமி ஹோம்ஸ்ட்ராம். தனது ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர் இவர்.
மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந.முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தவர். சுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்ற புதினத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தார். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டியுள்ளார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.