ஆப்கானிஸ்தானில் இந்திய துணை தூதரகத்தை தாக்கியது லஷ்கர்-இ-தொய்பா: அமெரிக்கா உறுதி
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இந்திய தூதரகம் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த மே 23ம்தேதி ஆப்கானிஸ்தானின் ஹீரட் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மீது 4 தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகள், துப்பாக்கிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தூதரகத்துக்குள் நுழைய முயன்ற ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். மற்ற 3 தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் போலீசார் சுட்டுக் கொன்றனர். தூதரகத்தின் அருகே உள்ள வீட்டில் பதுங்கியிருந்து, தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாலிபான்தான் இதை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவோ இந்த தாக்குதலை நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என்று உறுதியாக தற்போது தெரிவித்துள்ளது.
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்க இருந்த 3 நாட்களுக்கு முன்பு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தி இணக்கமான சூழ்நிலையை கெடுக்க லஷ்கர்-இ-தொய்பா சதி செய்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரம் மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய், இத்தாக்குதலுக்கு லஷ்கர் அமைப்புதான் காரணம் என்று அப்போதே தெரிவித்திருந்தார். தாலிபான் அமைப்பு இந்தியாவிற்குள் நேரடியாக எந்த தாக்குதலையும் நடத்தியதில்லை. ஆனால், லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவில் இதற்கு முன்பு பல நாசவேலைகளை செய்துள்ளது.
2008ம் ஆண்டு மும்பையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 2011ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீர், 2012ல் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ பாதுகாப்பு வாகனம் போன்றவற்றின் மீது இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளது.
2001ம் ஆண்டு முதல் ஹபீத் சையதை தலைவராக கொண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்பட தொடங்கியுள்ளது. இதன்பிறகு ஜமாத்-உத்-தவ்வா, அல்-அன்பல் அறக்கட்டளை, தரிக்-இ-ஹுர்மட்-இ-ரசூல், தரிக்-இ-தகாபுஸ் குயிப்லா அவ்வால் போன்றவை லஷ்கரில் இருந்து பிரிந்து சென்று துணை அமைப்புகளாக செயல்படுகின்றன. இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியாவை குறிவைத்து இப்போதுதான் லஷ்கர் தனது முதல் தாக்குதலை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது