மக்காவ் சென்ற ஹாங்காங் கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து சீனாவின் மக்காவ் சென்றுகொண்டிருந்த அதிவேகக் கப்பல் ஒன்று நடுக்கடலில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 120 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் கிடந்த ஏதோ ஒரு பொருள் மீது கப்பல் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இதுவரை அந்தப் பொருள் என்னவென்று அடையாளம் காணப்படவில்லை. விமானச் சேவைகள், கடற்படை, தீயணைப்புப் பிரிவு என அனைத்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவித்தன. கப்பலை மீண்டும் ஹாங்காங் தீவுக்குக் கொண்டுசென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
துறைமுகத்தில் சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் காத்துக்கொண்டிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். கப்பல் கட்டுப்பாட்டை இழந்தவுடன் பதற்ற நிலை நிலவியதாகப் பயணிகள் செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர். இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்ட காரணத்தினால் கப்பலில் காயமடைந்த பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.