இந்தியா கொண்டுவர கோரும் வழக்கு.. லண்டன் கோர்ட்டில் ஆஜரானார் மல்லையா! குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
லண்டன்: பல கோடி கடன் பெற்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மல்லையா நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளவர் விஜய் மல்லையா. நெருக்கடி அதிகரித்ததும், மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதனிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து பார்த்து இந்தியர்களை கோபமூட்டினார் மல்லையா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியையும் நேரில் பார்த்தார்.
தீவிர நடவடிக்கை
இந்திய நீதிமன்றங்கள் பலவும் அவரை நேரில் ஆஜராகநோட்டீஸ் அனுப்பியும் அவர் மதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் மல்லையாவை இந்தியா கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆலோசனை
இங்கிலாந்திலுள்ள சட்ட குழுவான, Crown Prosecution Service (CPS) உறுப்பினர்களுடன் சிபிஐ அதிகாரிகள் பல சுற்று ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். இந்திய அரசு சார்பில் இந்த அமைப்புதான் வாதிட உள்ளது.
இன்று விசாரணை
லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது விசாரணைக்கு மல்லையா நேரில் ஆஜராகினார். முன்னதாக தான் குற்றமற்றவன் என கூறிவருவதாகவும், அதையேத்தான் இப்போதும் சொல்வதாகவும் தெரிவித்தார் மல்லையா. எந்த நீதிமன்றத்தையும் தான் ஏமாற்றவில்லை என மல்லையா தெரிவித்தார். விசாரணை முடிவில் மல்லையாவை இந்தியா கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதிக்குமா இல்லையா என்பது தெரியும்.
ஒரே குற்றவாளி
இந்தியா-இங்கிலாந்து நடுவே 1993ல் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான குற்றவாளி சமிராபாய் பட்டேல் கடந்த ஆண்டு இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். கடந்த 23 வருடங்களில் இதுதான் முதல் முறையாகும்.