சீனாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் – 6 பேர் படுகாயம்
பீஜிங்: சீன ரயில் நிலையத்தில் வாட்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரயில் நிலையத்துக்குள் கடந்த மாதம் இரு கரங்களிலும் நீளமான வாட்களுடன் நுழைந்த ஒரு கும்பல் கண்ணில் தென்பட்ட நபர்களை எல்லாம் கொடூரமான முறையில் வெட்டி சாய்த்தது.
பீதியுடன் அலறியடித்து ஓடியவர்களை விடாமல் விரட்டிச் சென்ற அந்த கும்பலின் கொலைவெறி தாக்குதலுக்கு 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 143 பேர் படுகாயமடைந்தனர்.
க்சின்ஜியாங் மாகாணத்தை சீனாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் முஸ்லிம்கள் இது போன்ற கோரத் தாக்குதலை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.
உரும்கி ரயில் நிலையத்தின் உள்ளே கடந்த மாதம் 30-ம் தேதியன்று நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் அலறியடித்து ஓடிய மக்களை வாசலில் நீண்ட வாட்களுடன் நின்றிருந்த தீவிரவாதிகள் மடக்கிப் பிடித்து கண்மூடித் தனமாக வெட்டித் தள்ளினர். இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். 79 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், தெற்கு சீனாவின் குவாங்ஸோ ரயில் நிலையத்தினுள் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் நுழைந்த தீவிரவாதிகள், ரயிலுக்காக காத்திருந்த 6 பேரை வெட்டி சாய்த்தனர்.
கையில் வாளுடன் தப்பியோட முயன்ற ஒரு தீவிரவாதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.இச்சம்பவத்தில் காயமடைந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் குவாங்ஸோ அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications