அமெரிக்க காங்கிரசின் முதல் இந்து எம்.பி துளசி கப்பர்ட்டை சந்திக்கும் நரேந்திர மோடி!
நியூயார்க்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் அந்நாடு வாழ் இந்தியரும் முதலாவது இந்து எம்.பி.யுமான துளசி கப்பர்ட்டை சந்தித்து பேச இருக்கிறார்.
அமெரிக்க ஹவாய் தீவைச் சேர்ந்த துளசி கப்பர்ட், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யாவார். இவர் எம்.பி.யாக பதவி ஏற்கும் போது பகவத் கீதையின் பெயரில் சத்திய பிரமாணம் செய்து கொண்டவர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஹவாய் இராணுவம் சார்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று துளசி கப்பார்ட் இராணுவ சேவையாற்றியுள்ளார். 2004ம் ஆண்டு பாக்தாத்துக்கு மருத்துவ சிறப்புப் பணியாளராக அனுப்பப்பட்டார்.
பின்னர் அதிகாரிகளுக்கான பயிற்சியை முடித்த நிலையில், 2008ம் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு தீவிரவாதிகள் எதிர்ப்புப் பயிற்சியை குவைத் ராணுவத்தினருக்கு அளித்தார். இந்தப் பணிக்காக அவருக்கு குவைத் ராணுவ தேசிய விருதும் கிடைத்தது. அந்த விருதை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அடைந்தார்.
அத்துடன் 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறைகளைக் காரணம்காட்டி மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்து வந்ததை தொடர்ந்து கடுமையாக அவர் எதிர்த்து வந்தார். மோடியை அமெரிக்காவுக்கு அழைப்பதில் மிக முனைப்புடன் செயல்பட்டவர். நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படவுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் துளசி கப்பர்ட்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொள்கிறார். மோடி சந்திக்க இருக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக துளசி கப்பர்ட்டும் இடம்பிடித்துள்ளார்.