பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து மோடி- ஒபாமா ஆலோசனை
வாஷிங்டன்: சர்வதேச அளவில் விஸ்வரூபமெடுத்துள்ள பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினர்.
சுவிஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இருப்பினும் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள், மத சுதந்திரம் குறித்து இருவரும் விவாதிக்கவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமெரிக்காவின் 18 எம்.பி.க்கள் அடங்கிய குழு ஒன்று இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடியிடம் ஒபாமா விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.