மோடி பிரதமரானால் சீனாவுடனான உறவு நெருக்கமாகும்: சீனா நாளேடு கருத்து
பெய்ஜிங்: இந்தியாவின் பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி பொறுப்பேற்றால் இருநாடுகளிடையேயான உறவுகள் மேலும் நெருக்கமாகும் என்று சீனாவின் அரசு சார்பு குளோபல் டைம்ஸ் நாளேடு கருத்து தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதை தொடக்கம் முதலே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தயக்கத்துடனே பார்த்து வருகின்றன. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி எக்கானமிஸ்ட் ஏடோ, வெளிப்படையாகவே இந்தியர்கள் ராகுல் காந்தியையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது.
இந்த நிலையில் பாகிஸ்தானுடனான உறவுகளில் மோடி கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை அவரது தேர்தல் பிரசார கூட்டங்கள் வெளிப்படுத்தின. இதனால் பாகிஸ்தான் மிக கடுமையான கருத்துகளை வெளியிட்டிருந்தது. இப்படி பாகிஸ்தான், மேற்குலக நாடுகள் மோடியை அச்சத்துடன் பார்த்து வரும் நிலையில் தெற்காசிய பிராந்திய வல்லரசுகளில் ஒன்றான சீனாவோ, மோடியை இணக்கமான சக்தியாக பார்க்கிறது.
சீனாவின் அரசு சார்பு நாளேடான குளோபல் டைம்ஸில் மோடி குறித்து வெளியாகி இருக்கும் கருத்துகள்:
குஜராத்தில் சீன முதலீடுகள்
குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் சீனாவுடனான நல்லுறவுகளை அவர் வளர்த்துக் கொண்டார். குஜராத் மாநிலத்தில் ஏராளமான சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதனால் குஜராத் மாநிலம் பொருளாதார ரீதியில் வள்ரச்சி அடைந்துள்ளது.
பிரதமரானல்..
இதனடிப்படையில் மோடியே நாளை இந்தியாவின் பிரதமரானாலும் சீனாவுடனான உறவுகள் மேலும் நெருக்கமடையவே வாய்ப்பு இருக்கிறது.
மேற்குலகம் தப்புக் கணக்கு
சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மோடியின் பேச்சுகளை வைத்துக் கொண்டு மோடி பிரதமரானால் இருநாடுகளிடையேயான உறவு சீர்குலையும் என்று மனக்கணக்கு போடுகின்றன. ஆனால் மோடி பிரதமரனால் ஜப்பான், வியட்நாம், சீனாவுடனான உறவு வலுவடையும் என்பதை அந்நாடுகள் உணரத் தவறுகின்றன.
பாஜக தேர்தல் அறிக்கை..
மோடியின் பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இந்திய நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா செலுத்தி வந்த ஆதிக்கத்தை தகர்க்கக் கூடிய அம்சம். இதுதான் மேற்குலக நாடுகளின் அச்சத்துக்கும் ஒரு காரணம்.
சீனாவுக்கு எதிராக..
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சீனாவுக்கு எதிராக இந்தியாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் பிரதான பிரச்சனைகளில் பாராமுகப் போக்கையே மேற்குலக நாடுகள் கடைபிடித்தும் வந்துள்ளன. இதனாலேயே இந்தியா, சீனா மற்றும் ரஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுடன் நட்புறக் கரம் நீட்டுகிறது.
பலவீனமான அரசுகள்..
கடந்த 10 ஆண்டுகாலமாக இந்தியாவில் இருந்த பலவீனமான மத்திய அரசு மேற்குலக நாடுகள் நினைத்ததை சாதிக்க வசதியாக இருந்தது. ஆனால் மோடி பிரதமரானால் நிலைமை வேறாகும்.
இந்தியாவின் புதின்..
ரஷியாவின் புதினைப் போல வலுவான பிரதமராக மோடி உருவானால் மேற்குல நாடுகளுக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகாவும் சவாலாகவே விளங்குவார். குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யாவின் கூட்டணி குறித்து அமெரிக்கா விசனப்பட்டுத்தான் நிற்கும்.
பாஜகவின் நிலை மாற்றம்
பாரதிய ஜனதாவின் தீவிர தேசியவாதம் என்ற நிலை மாறி உள்ளது. அதனால் அவர் பிரதமராகும் போது தம் முன்னாள் உள்ள பல சித்தாந்த ரீதியான சவால்களை எளிதில் கையாள்வார்.
மோடி சர்வாதிகாரத்தை தடுக்கும் கூட்டணி அரசு..
ஒருவேளை கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் நரேந்திர மோடி பிரதமரானால் அவர் ஒரு சர்வாதிகாரியாக உருவெடுக்க முடியாமலே போகும். இவ்வாறு சீனா நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.