தீவிரவாதத்தை எதிர்த்து அமீரகமும், இந்தியாவும் சேர்ந்து போராடும்: துபாயில் மோடி பேச்சு
துபாய்: தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் சேர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். ஸ்டேடியத்தில்50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது மோடி பேசுகையில்,
நல்லுறவு
அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவுடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது. பேச்சுவார்த்தை மூலமே அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
தீவிரவாதம்
தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் சேர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்பதையே இன்று தெரிவித்துக் கொள்கிறோம்.
பலி
தீவிரவாதத்திற்கு எல்லையே இல்லை. பாங்காக்கில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அப்பாவி மக்கள் தான் பலியாகிறார்கள். தீவிரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தையும், அதை ஊக்குவிக்கும் நாடுகளையும் எதிர்த்து போராட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்.
தாலிபான்
நல்ல தாலிபான், கெட்ட தாலிபான், நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீங்கள் தீவிரவாதத்துடனா அல்லது மனிதநேயத்துடனா என்பது குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இந்தியா
இந்தியாவை முன்னேற்ற வேண்டும். நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை முன்னேற்ற வேண்டியுள்ளது. அங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க செய்வோம்.
அன்பு
அபுதாபி மற்றும் துபாயில் மக்கள் என் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள். இதை நான் மறக்கவே மாட்டேன். அபுதாபியில் பட்டத்து இளவரசர் என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தார். இந்த அன்பும், மரியாதையும் ஒருவருக்கு அல்ல மாறாக ஒட்டுமொத்த இந்தியா மற்றும் அதன் மக்களுக்கு ஆகும்.
குட்டி இந்தியா
துபாயில் கூடியிருப்பவர்களை பார்த்தால் குட்டி இந்தியா போன்று உள்ளது. அமீரகத்தில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் உங்களை நான் பாராட்டுகிறேன். பாரத் மாதா கி ஜெய் என்றார் மோடி.
மலையாளம்
இன்று கேரள மக்களின் மலையாள புத்தாண்டுஆகும் என்று தெரிவித்த மோடி அவர்களுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதை கேட்டு அரங்கில் இருந்த கேரள மக்கள் மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினர்.