முதலீடுகள் அதிகரிக்கும்.. எல்லை பிரச்சனையில் விட்டுக் கொடுக்கமாட்டார்..: மோடி குறித்து சீன ஏடு
பெய்ஜிங்: இந்தியாவின் பிரதமராக பாஜகவின் நரேந்திர மோடி பொறுப்பேற்றால் சீனாவுடன் பொருளாதார ரீதியாக நல்லுறவும் அரசியல் ரீதியாக கடுமையான நிலையையும் மேற்கொள்வார் என்று சீனா ஏடான தி குளோபல் டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நரேந்திர மோடி குறித்து சீன ஊடகங்கள் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. தி குளோபல் டைம்ஸ் ஏடு மோடி குறித்து எழுதியிருப்பதாவது:
குஜராத் மாநிலத்தில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக 4 முறை சீனாவுக்கு பயணம் மேற்கொண்டவர் மோடி. 2011ஆம் ஆண்டு தி எகனாமிஸ்ட் ஊடகம், இந்தியாவின் குவாங்டங் என்று குஜராத்தை வர்ணித்திருந்தது. இம்மாநிலம் இந்தியாவின் மக்கள் தொகையில் 5% இருந்தாலும் ஏற்றுமதியில் 22%, தொழில்வளர்ச்சியில் 16% பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது.
சீன அரசியல் வல்லுநர் ஃபு ஜியாகியாங், மோடி பிரதமரானால் தொழில்துறை உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுப்பார். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான முதலீட்டை ஈர்ப்பார் என்கிறார். மேலும் இந்தோ-சீனா வர்த்தாக உறவை மோடி மேம்படுத்துவார் என்பது அவரது கருத்து.
அதே நேரத்தில் மற்றொரு அரசியல் வல்லுநரான ஹூ ஜியாங்கோ, பொருளாதார ரீதியாக சீனாவுடன் இணக்கமான போக்கை மோடி கடைபிடிக்கலாம். ஆனால் எல்லை பிரச்சனை போன்ற அரசியல் விவகாரங்களில் அவர் கடுமை காட்டக் கூடும். இந்தியாவில் வர்த்தக கொள்கைகளும் அரசியல் மயமாகி இருப்பதால் வர்த்தக உறவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்.
இவ்வாறு குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.