சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரானார் முகமது பின் சல்மான்
குவைத்: சவுதி அரேபியாவின் இளவரசர் பொறுப்பில் இருந்து முகமது பின் நயீப் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மானை சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
அரபு நாடான சவுதி அரேபியாவில், 10 ஆண்டு காலம் பதவியில் இருந்து வந்த மன்னர் அப்துல்லா, தனது 90 வயதில் உடல் நலக்குறைவால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து புதிய மன்னராக 79 வயதான சல்மான் பின் அப்துல் அஜீஸ் முடி சூட்டப்பட்டார்.
சவுதி மன்னர் சல்மான், தன் அடுத்த வாரிசாக, உள்துறை அமைச்சர், இளவரசர் முகமது பின் நயீப், 55, என்பவரை அறிவித்தார். அப்போதே சவுதி அரசு வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் மறைந்த சவுதி மன்னர் அப்துல்லா, தன் அடுத்த வாரிசாக, இளவரசர் சல்மானை நியமித்திருந்தார்.
பின் 2014 மார்ச் மாதம் சல்மானை அடுத்து, துணை இளவரசராக மக்ரன் பின் அப்துல் அஜீஸ் பின் சாத் என்பவரை நியமித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 23ல், அப்துல்லா மறைந்தார். இதைத் தொடர்ந்து, சவுதி மன்னராக பதவியேற்ற சல்மான், மக்ரன் பின் அப்துல் அஜீஸ் பின் சாத் அடுத்த வாரிசாக அறிவிக்காமல், நயீப்பை அறிவித்தார்.
சவுதி மன்னரின் அடுத்த வாரிசாக நியமிக்கப்பட்ட நயீப், துணை பிரதமர், உள்துறை அமைச்சர், அரசியல் மற்றும் பாதுகாப்பு குழு தலைவர் என, பல பொறுப்புகளை வகித்து வந்தார். முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். ராணுவ அமைச்சராக செயல்பட்டு வந்தார் சல்மான்.
இதனிடையே திடீரென முகமது பின் நயீப் இன்று இளவரசர் பட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மன்னர் சல்மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றனர். துணை பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே துணை பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பதவி பிரமாணம் செய்யப்பட்டுள்ளார். அவரே இனி துணை பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் வகிப்பார் என்று சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.