கானா நாட்டில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து... மழைக்கு ஒதுங்கிய 70 பேர் பலி
அக்ரா: கானா நாட்டில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு மழைக்கு ஒதுங்கியிருந்த 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்தவகையில் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பெட்ரோல் பங்கு தீப்பிடித்தது. இதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.
தீவிபத்துக் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்குள்ளாக தீயில் சிக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.