குழியில் விழுந்த குட்டி யானை.. படபடத்த தாய்.. "விக்ரம்" பாணியில்.. சிபிஆர் சிகிச்சை கொடுத்த வனத்துறை
பாங்காக்: தாய்லாந்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை மீட்க முயன்ற தாய் யானையின் பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை கண்ணீர் மழையில் நனைத்தது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தாயின் பாசமிகு அன்புக்கு உலகில் ஈடு இணையே கிடையாது. விலங்கினங்களும் இதற்கு விதி விலக்கல்ல. குறிப்பாக யானை தனது குட்டி மீது வைத்திருக்கும் அலாதி அன்பை அவ்வளவு எளிதாக வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. அந்த அளவுக்கு யானை தன் குட்டி மீது பேரன்பை பொழியும்.
தற்போது இதை மெய்பிக்கும் வகையில் பள்ளத்தில் விழுந்த தன் குட்டியை தாய் யானை மீட்க நடத்திய பாசப்போராட்டம் தான் இணையத்தில் இன்று டிரெண்ட் ஆகி வருகிறது.

பள்ளத்தில் விழுந்த குட்டி யானை
தாய்லாந்து நாட்டி நகோன் நயோக் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு தாய் யானை தனது ஒரு வயது குட்டி யானையுடன் உலா வந்துகொணிருந்தது. தாய் யானை மெல்ல அசைந்து செல்ல அதனுடன் வந்து கொண்டிருந்த அந்த குட்டி யானை ஆடிக்கொண்டும் துள்ளி குதித்துக்கொண்டும் பின்னால் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு தோண்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு கால்வாய் பள்ளத்தில் குட்டி யானை விழுந்தது. உடனே குட்டி யானை அபயக்குரல் எழுப்பியது. இதைக் கேட்டு பதறிப்போன தாய் யானை, தனது குட்டியை மீட்க கடும் பாடு பட்டது. இதைக்கவனித்த அவ்வழியாக சென்ற மக்கள் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தாய் யானையின் பாசப்போராட்டாம்
எனினும் பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என தாய் யானை அங்கும்-இங்குமாக சுற்றி வந்தது. உங்களுக்கு மட்டும் தான் பாசம் இருக்குமா எனக்கும் இருக்கிறது என்பதுபோல, குட்டியை மீட்பதற்காக அந்த தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் அங்கு கூடியிருந்தவர்களை கண்ணீர் மழையில் நனைத்தது. இதற்கிடையே அங்குள்ள தேசிய பூங்கா அதிகாரிகள் யானையை மீட்பதற்காக சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் உடனடியாக பள்ளத்தில் விழுந்த யானைக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆனால் அந்த குட்டி யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் தாய் யானை சுற்றி வந்தது. இதனால் தாய் யானையை எப்படியாவது அங்கிருந்து விலக வைக்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் மற்றும் சோர்வுடன் தாய் யானை இருப்பதால் அதற்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு குட்டி யானையை மீட்டு விடலாம் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

அசைவின்றி கிடந்த தாய் யானை
அதன்படி, தாய் யானைக்கு மயக்க மருந்து கொடுத்தனர். இதனால், அந்த யானை அப்படியே சிறிய பள்ளத்தில் சரிந்து விழுந்தது. இதையடுத்து தாய் யானையை கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்டு வெளியே இழுத்து போட்டனர். அதன் பிறகு குட்டி யானையை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். குட்டி யானை மீட்கப்பட்டதும் தாய் யானை அருகே ஓடிப்போய் நின்றது. ஆனால் மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் தாய் யானை, மயக்கத்தில் இருந்து மீளவில்லை. குட்டி யானை தாயிடம் அளவாளவிய போதும் தாய் யானை அசைவு இன்றி கிடந்தது.

மெய்சிலிர்க்க வைத்த காட்சி
இதைக் கண்டு பதறிய கால்நடைத்துறை ஊழியர்கள், யானைக்கு அவசரகால நேரத்தில் முதலுதவியாக செய்யபப்டும் சி.பி.ஆர் சிகிச்சையை அளித்தனர். இதன் பலனாக சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்து தாய் யானை மீண்டது. தட்டுத்தடுமாறி எழுந்த யானை தனது குட்டியை தன்னுடன் அணைத்துக்கொண்டது. அதன்பிறகு மீண்டும் ஒய்யாரமாய் தனது குட்டியுடன் அசைந்தாடி சென்ற யானை வனத்துக்குள் சென்றது. இந்தக் காட்சிகள் அங்கு நின்றவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து
குட்டி யானையை மீட்க முயன்ற தாய் யானையின் பாசப்போராட்ட வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதேபோல் தாய் யானையையும், அதன் குட்டியையும் பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவினரை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், யானைக்கும் அதன் குட்டிக்கும் இடையேயான பாசப்போராட்டம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். இதில் நெட்டிசன் ஒருவர், மீட்புக்குழுவினரை பாராட்டி போட்டுள்ள டுவிட்டில், 'இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்' என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் வெளியிட்ட பதிவில், 'முற்றிலும் வியப்புக்குரியதாக இந்த மொத்த சம்பவமும் உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications