மியான்மரில் ராணுவம் அட்டூழியம்.. மறைமுகமாக உதவும் சீனா, ரஷ்யா.. குறி வைக்கிறது அமெரிக்கா.. பின்னணி!
மியான்மர்: மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு பின் சீனா மற்றும் ரஷ்யாவின் பங்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது.
மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.
ஆனால் பாராளுமன்றம் தொடங்கும் முன் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆங் சன் சுகியின் தேர்தல் வெற்றி நேர்மையானது இல்லை, இதில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மியான்மர்
தேர்தல் முடிவு முறைகேடானது, அதனால் முடிவை நிறுத்துவைத்துவிட்டு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார். பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். ஆங் சன் சுகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நிலை என்ன
இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் மக்கள் இங்கு சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். தினமும் 100க்கும் அதிகமான மக்கள் மியான்மரில் ராணுவம் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் மட்டும் 487 பேர் வரை மியான்மரில் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியான்மரில் இருந்து சீனாவிற்கும், வங்கதேசத்திற்கும், தாய்லாந்திற்கும் அகதிகள் சாரைசாரையாக சென்று கொண்டு இருக்கிறார்கள்.
அகதிகள்
இதில் சீனாவிற்குள் அகதிகள் செல்வதை தடுக்கும் வகையில் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை சீனாவும் , ரஷ்யாவும் ஆதரித்து வருகிறது . அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது.
ரஷ்யா என்ன
மியான்மரின் ராணுவத்திற்கு புதிய ராணுவ உபகரணங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை ரஷ்யா செய்துள்ளது. மியான்மருக்கு புதிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது பிசினஸை பெருக்க ரஷ்யா விரும்புகிறது. இதை மனதில் வைத்தே ரஷ்யா தற்போது மியானமரின் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது. மியான்மர் ராணுவம் பயன்படுத்தும் பெரும்பாலான டாங்கிகள் ரஷ்யாவின் ஏற்றுமதி.
ராக்கெட்
கடந்த சில நாட்களுக்கு முன் மியான்மர் கிராமங்களில் அந்நாட்டு ராணுவம் ஏவிய ஏவுகணைகள் கூட ரஷ்யாவின் ஏற்றுமதிதான். இந்த ராணுவ புரட்சியை ரஷ்யா பிஸினசாக பார்க்கும் போது இன்னொரு பக்கம் சீனாவோ இதை தெற்காசிய பிராந்திய அரசியலுக்கு மிக அவசியமான விஷயமான பார்க்கிறது. மியான்மர் புரட்சி மூலம் அந்த நாட்டில் ஆளுமை செலுத்த சீனா நினைக்கிறது.
ராணுவ ஆட்சி
ராணுவ ஆட்சியை பயன்படுத்தி மியான்மரை மறைமுகமாக கட்டுப்படுத்த சீனா நினைக்கிறது . ஆசியாவில் ஒரு நாடு அமைதி இழந்தால் முதலில் கொண்டாடுவது சீனாதான். இதனால்தான் தற்போதும் மியான்மரின் ராணுவ ஆட்சியை நேரிடியாகவே சீனா ஆதரித்து வருகிறது.
கோபம்
தெற்காசியாவில் சீனாவின் பிக்பாஸ் மனோபாவத்தை வெளிக்காட்ட மியான்மர் பிரச்னையை பயன்படுத்திக்கொள்ள அதிபர் ஜிங்பிங் விரும்புகிறார்.மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங்தான் அங்கு ராணுவ ஆட்சியை நடத்தி வருகிறார். இவரே ஒரு ரஷ்யா, சீனாவின் கைப்பாவைதான் என்றும் புகார்கள் வைக்கப்படுகிறது.
கைப்பாவை
இதனால் அமெரிக்க அதிபர் பிடன் வெளிப்படையாக மியான்மர் ராணுவ புரட்சியை எதிர்த்து பேசி உள்ளார். மியான்மர் ராணுவ ஆட்சியை முறியடிப்பதற்கு பிடன் முக்கியமான விஷயமாக பார்க்கிறார் . அமெரிக்க vs ரஷ்யா vs சீனாவின் பல வருட மோதலில் மியான்மர்தான் இனி புதிய அத்தியாயங்களை எழுத போகிறது என்று உலக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.