செவ்வாயில் மரண மாஸ்.. சுழன்று சுழன்று கெத்தாக நடந்த ரோவர்.. வீடியோ வெளியிட்டு நாசா ஹேப்பி
லாஸ் ஏஞ்சல்ஸ்: நாசாவின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் முதல்முறையாக கால் பதித்து சுழன்று சுழன்று நகர்ந்து சென்றுள்ளது. சிவப்பு கிரகமான செவ்வாயின் மேற்பரப்பில் ரோவர் எடுத்த படத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19-ல் வரலாற்று நிகழ்வாக நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் பூமியில் இருந்து ஏழு மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக சென்றது. 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரோவர், 222.45 மில்லியன் கி.மீ. பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் தனது முதல் இயக்கத்தை நிகழ்த்தி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் ரோவர் கால் பதித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் நாசா வெளியிட்டுள்ளது.
ஆறு சக்கரத்துடன் கார் அளவிலான இந்த ரோவர் கருவி வானியலியலை துல்லியமாக ஆய்வு செய்யக்கூடியது. இது செவ்வாயில் அற்புதமாக கால் பதிக்கும் வீடியோ காட்சி காண்போரை அதிசயக்க வைத்துள்ளது. மொத்தம் 6.5 மீட்டர் (21.3 அடி) தூரத்தை அரை மணி நேரம் ஊர்ந்து சென்று பார்த்துள்ளது ரோவர்.
எப்படி வந்தது
ரோவர் தரையிறங்கி சென்ற இடம் மறைந்துபோன ஏரி படுக்கை அல்லது நதி படுக்கையாக கருதப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) மிஷன் ஆய்வாளர்களின் வழிகாட்டுதல்களின் படி, ரோவர் 4 மீட்டர் (13.1 அடி) முன்னோக்கி சென்றது. பின்னர் 150 டிகிரி அளவிற்கு அதன் இடது பக்கம் திருப்பி, பின்னர் 2.5 மீட்டர் (8.2 அடி) பின்னோக்கி சென்றது.
பெரிய மைல்கல்
"இது நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாகச் சென்றது," இது ஒரு "பெரிய மைல்கல்" என ஜேபிஎல் இயக்கத்தின் சோதனை பொறியியலாளர் அனெய்ஸ் ஜரிஃபியன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரோசா எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
சுற்றியுள்ள நிலப்பரப்பை பார்க்கும் போது கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. தூரத்தில் பாறைகள் உயரமாக உள்ளன.
அதன் வேலை என்ன
கூடுதல், குறுகிய தூர சோதனை ஓட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விடாமுயற்சி என அழைக்கப்படும் அந்த ரோவர் ஒரு நாளைக்கு சராசரியாக 200 மீட்டர் ஓட்டும் திறன் கொண்டது.ஆனால் புதைபடிவ நுண்ணுயிர் வாழ்வின் தடயங்களைத் தேடுவதே இந்த ரோவரின் முக்கியமான பணியாக நாசா கருதுகிறது.
பாறைகள் எப்போது வரும்
இதுவரை, ரோவர் மற்றும் அதன் முக்கிய ரோபோ கை உட்பட அதன் உபகரணங்கள் எல்லாம் எந்த குறைபாடும் இல்லாமல் சிறப்பான முறையில் செயல்படுவதாகத் தெரிகிறது என்று ஜேபிஎல் ஆய்வக துணை பணி மேலாளர் ராபர்ட் ஹாக் கூறினார். இதனிடையே செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளை துளையிட்டு சேகரித்து அதனை மீண்டும் பூமிக்கும் கொண்டு வரும் பணியினை இன்னும் நாசா விஞ்ஞானிகள் மேற்கொள்ளவில்லை. விரைவில்அந்த பணிகளை தொடங்குவார்கள் என தெரிவிகிறது.